துல்லிய தாக்குதலுக்கு பயன்பட்ட இந்தியாவின் அஸ்திரங்கள்!
பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, தீவிரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதலை கச்சிதமாக முடித்து திரும்பி இருக்கிறது இந்திய விமானப்படை.
பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, தீவிரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதலை கச்சிதமாக முடித்து திரும்பி இருக்கிறது இந்திய விமானப்படை. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ள இந்த துல்லிய தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததற்கு சிறப்பான திட்டமிடல் முக்கிய காரணம். புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட வெறும் 15 நாட்களில் இந்த அதிரடி தாக்குதலுக்கான திட்டம் வகுக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதல் நடந்த தினத்திற்று மறுநாள் முதலே இந்த தாக்குதல் திட்டத்தை கையில் எடுத்தது இந்திய பாதுகாப்புத் துறை. இந்தியா ராணுவத்தின் முப்படை தளபதிகள் ஆலோசனை நடத்தி, இந்த திட்டத்தை இறுதி செய்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆலோசகரிடம் தெரிவித்துள்ளனர்.

அனுமதி கிடைத்த பின்னர், இந்த திட்டத்தை படு ரகசியமாக செயல்படுத்த நாள் குறித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவமே எதிர்பார்க்காத நேரத்தில் தாக்குதலை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு துவங்கிய இந்த தாக்குதலுக்கான செயல்திட்டம், அடுத்த ஒரு மணிநேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இதில், தீவிரவாதிகளின் முகாம்கள் மீதான தாக்குதல் என்பது வெறும் 17 நிமிடங்களில் முடிந்தது. இந்த நிலையில், இந்த தாக்குதலுக்காக மிராஜ் 2000 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், அதற்கு துணையாக நின்ற இதர விமானங்கள், ஆயுதங்கள் பற்றியும் இந்த செய்தியில் காணலாம்.

மிராஜ் - 2000 விமானங்கள்
ஏர் அசெட்- 1 என்ற முதன்மை தர வரிசையில் 12 மிராஜ் 2000 விமானங்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது. கார்கில் போரின் வெற்றியில் மிராஜ் 2000 போர் விமானங்கள் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது.

குறிப்பாக, இமயமலை மீதான கடினமான நிலபரப்பு மற்றும் சீதோஷ்ண நிலைகளில் மிராஜ் 2000 விமானங்களின் செயல்பாடு மிக அபாரமாக இருந்தது. எனவே, இந்த தாக்குதலுக்கும், மிராஜ் 2000 போர் விமானங்களையே இந்திய விமானப்படை தேர்வு செய்து பயன்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய விமானப்படை போர் விமானங்கள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமானதாக இருந்தது என்று பாகிஸ்தான் விமானப்படையும் தெரிவித்துள்ளது. இந்த போர் விமானம் மணிக்கு 2,334 கிமீ வேகம் வரை பறக்கும். ஆனால், நேற்று தாழ்வாக பறந்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. தாழ்வான உயரத்தில் பறக்கும்போது 1,020 கிமீ வேகம் வரை பறக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் மிராஜ் 2000 போர் விமானங்கள் நவீன அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டன. லேசர் வழிகாட்டுதலில் இலக்கை தாக்கும் வெடிகுண்டு பொருத்தும் வசதி இப்போது பயன்பட்டு இருக்கிறது. மேலும், இரவிலும் துல்லியமாக இலக்கை அழிப்பதற்கான வசதியும், நவீன மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பையும் பெற்றிருக்கிறது.

எம்பிடிஏ பிஜிஎல் வெடிகுண்டுகள்
அடுத்து ஏர் அசெட் 2 என்ற இரண்டாவது அஸ்திரம், இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட எம்பிடிஏ பிஜிஎல் 1000 என்ற லேசர் வழிகாட்டு முறையில் இலக்கை தாக்கும் வெடிகுண்டுகள்தான். இந்த வெடிகுண்டுகள் மிக துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அதாவது, இலக்கிற்கு அதிகம் சேதத்தை தருமே தவிர்த்து, பிற பகுதிகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தாது.

ஐஏஐ ஹெரான் - மசாட்ஸ்-1 ஆளில்லா விமானம்
ஏர் அசெட் 3 வரிசையில், தாக்குதலுக்கு முன்னதாக கண்காணிப்பு பணிகளுக்காக ஐஏஐ ஹெரான் மசாட்ஸ்-1 என்ற நடுத்தர உயரத்தில் நீண்ட தூரம் பறக்கும் ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானம் எதிரிகள் ஊடுவுருவலை கண்டறிவதற்காக களமிறக்கப்பட்டது. இதுவும் தாக்குதல் திட்டத்திற்கு துணையாக நின்றுள்ளது.

எம்பரர் 145 நேத்ரா பறக்கும் கட்டுப்பாட்டு மையம்
ஏர் அசெட்-4 என்ற தர வரிசையில் எம்பரர் 145 நேத்ரா என்ற விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானம் எதிரிகளின் ஊடுவருவல் குறித்து எச்சரிப்பதோடு, துரித கட்டுப்பாட்டு மையமாகவும் செயல்படும். இந்த விமானத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கான கருவிகள், சாஃப்ட்வேரை டிஆர்டிஓ அமைப்பு உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஐஎல்-78 டேங்கர் விமானம்
மிராஜ் 2000 போர் விமானங்களுக்கு எரிபொருள் தேவைப்படும்பட்சத்தில், நடுவானிலேயே எரிபொருள் நிரப்புவதற்கான ஐஎல்-78 என்ற பெட்ரோல் டேங்கர் விமானம் ஆக்ரா விமானப்படை தளத்திலிருந்து அனுப்பப்பட்டது. தாக்குதல் முடிவடையும் வரை எல்லை வான் பகுதிகளில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.

சுகோய் 30 எம்கேஐ போர் விமானம்
ஏர் அசெட் 6 என்ற வரிசையில் சுகோய் 30 எம்கேஐ போர் விமானம் சிர்சா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு வானில் பறந்தபடி இருந்தது. எதிரிகளிடமிருந்து ஏதேனும் வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை சமாளிக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.
சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பன்முக பயன்பாட்டு வகையை சேர்ந்தது. தாக்குதல் நடத்துவது, எதிரி விமானங்களை வழிமறித்து தாக்குவது, எதிரி வான் பகுதியை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.

பெச்சோரா ஏவுகணைகள்
இந்திய- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பெச்சோரா என்ற அதிநவீன ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. தாக்குதலுக்கு பின்னர், ஏவுகணை மற்றும் வான் வழித்தாக்குதலை முறியடிக்கும் விதத்தில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இது சோவியத் ரஷ்யாவின் தயாரிப்பு. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்கும் எதிரி விமானங்களை கண்டறிந்து அழிப்பது எளிது. ஆனால், தாழ்வாக பறக்கும் எதிரி போர் விமானங்கள், ஏவுகணைகளை அழிப்பதற்கு இது உதவும்.
Image Courtesy: Wilson44691 / Wiki Commmons

இந்த 7 அஸ்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதை சற்று தாமதமாகவே பாகிஸ்தான் விமானப்படை கண்டறிந்துள்ளது. எனவே, பாகிஸ்தான் விமானப்படையின் பலம் குறித்து பல்வேறு சந்தேகங்களை பாதுகாப்பு நிபுணர்கள் எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








