முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்... ஹூண்டாய் கிரெட்டாவை பரிசளித்து தந்தையை திக்குமுக்காட வைத்த மகன்...
மகன் ஒருவர் தனது தந்தைக்கு ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியை பரிசளித்து அவரது கனவை நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை சொந்தமாக ஒரு புதிய கார் வாங்குவது என்பது இன்னமும் பலருக்கு பெரிய கனவுதான். இந்த வகையில் மகன் ஒருவர் தனது தந்தைக்கு ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியை பரிசாக வழங்கி, அவரது கனவை நிறைவேற்றியுள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அந்த மகன் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தர்மன் ப்ரோகித் என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தனது தந்தைக்கு மகன் காரை தேர்வு செய்வது உள்பட அனைத்து நிகழ்வுகளையும் இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. கார்களை விரும்பும் தனது தந்தைக்கு காரை பரிசாக அளிக்க மகன் விரும்பும் நிகழ்வை காட்டுவதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது.

இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த தந்தைக்கு புதிய கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். புதிய கார்களை பார்த்தால், அதைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அவர் நேரம் செலவிடக்கூடியவர். சுருக்கமாக சொல்வதென்றால், சொந்தமாக ஒரு கார் வைத்திருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் பொருளாதார தடைகள் காரணமாக அவரால் அதை செய்ய முடியவில்லை.

எனவே அவருக்கு புதிய காரை பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். இதன்பின் தந்தையும், மகனும் இணைந்து தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற காரை தேட தொடங்கினர். முதலில் டாடா ஹாரியரை அவர்கள் தேர்வு செய்தனர். ஆனால் அது மிகவும் பெரிய கார் என்பதால், டாடா நெக்ஸானின் மீது அவர்களின் கவனம் திரும்பியது.

எனினும் அதன்பின் டாடா நெக்ஸானையும், ஹூண்டாய் கிரெட்டாவையும் ஒப்பிட்டபோது அந்த தந்தை, ஹூண்டாய் கிரெட்டாவை இறுதியாக தேர்வு செய்துள்ளார். இதன்பின் ஹூண்டாய் டீலர்ஷிப் ஒன்றில், அவர்கள் கிரெட்டா எஸ்யூவியை முன்பதிவு செய்தனர். சில நாட்களுக்கு பிறகு டீலர் ஸ்டார்யார்டுக்கு கார் வந்தது. அவர்கள் அங்கு சென்று காரை முழுமையாக பரிசோதித்தனர்.

அந்த தந்தையின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. காரை சுற்றிலும் அவர் நன்கு பரிசோதித்து கொண்டார். அத்துடன் சிறிது நேரம் காருக்குள் அமர்ந்தும் பார்த்தார். அடுத்த வாரம் கார் டெலிவரி செய்யப்படும் என அப்போது அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. டெலிவரி தினத்தன்று நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் ஆட்டோ ரிக்ஸா மூலம் அந்த குடும்பத்தினர் டீலர்ஷிப்பிற்கு சென்றுள்ளனர். இதன்பின் காரை டெலிவரி பெறுவதற்கு முன்னதாக, ஆவணங்கள் தொடர்பான வேலைகள் அனைத்தையும் அவர்கள் முடித்தனர். அப்போது அந்த குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் தோன்றிய அளவு கடந்த மகிழ்ச்சியை வீடியோவில் தெளிவாக காண முடிகிறது.
இதன்பின் அவர்கள் காரை கோயிலுக்கு ஓட்டி சென்று பூஜை செய்தனர். ஆனால் இந்தியாவில் பிள்ளைகள் தங்களது பெற்றோருக்கு இப்படி கார்களை பரிசாக வழங்குவது இது முதல் முறை கிடையாது. உங்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் தெரியவந்தால், கமெண்ட் பாக்ஸ் வாயிலாக அதுகுறித்த தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








