மகன் செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன அப்பா... குடும்பமே ஆச்சரியத்தில் மூழ்கியது...
மகன் செய்த காரியத்தால் தந்தை மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் மற்றும் கிளாசிக் சீரிஸ் பைக்குள்தான் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தவையாக உள்ளன. எனவே அந்த மோட்டார்சைக்கிள்களை இந்திய சாலைகளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை மாடிஃபிகேஷன் செய்தது தொடர்பான காணொளிகளை நாம் பலமுறை பார்த்துள்ளோம். இம்முறை வித்தியாசமான ஒரு காணொளி யூ-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மகன் ஒருவர் தனது தந்தைக்கு அவரது கனவு பைக்கான ராயல் என்பீல்டை பரிசளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்துவதை அந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.

தற்போது 40, 50 வயதுகளில் இருப்பவர்களுக்கு ராயல் என்பீல்டு பைக்கை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு ஒரு காலத்தில் இருந்திருக்கும். ஆனால் குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால், அந்த கனவு கை கூடாமல் போயிருக்கலாம். அப்படி இருக்கும்போது தனது மகன் மூலம் அந்த கனவு நிறைவேறினால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கேன்பீ லைஃப்ஸ்டைல் என்ற யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தனது தந்தைக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசளிப்பது தொடர்பான திட்டத்தை மகன் விளக்குவதுடன் இந்த காணொளி தொடங்குகிறது. இந்த நபர் தனது தந்தைக்காக ராயல் என்பீல்டு பைக்கை ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பே முன்பதிவு செய்து விட்டார்.

ஆனால் அதன்பின் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக பைக் டெலிவரி தாமதமாகியுள்ளது. எனினும் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் வழங்கப்பட்ட பின்னர், ராயல் என்பீல்டு டீலர்ஷிப்பில் இருந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அத்துடன் பைக்கை டெலிவரி எடுத்துக்கொள்ளும்படியும் கூறியுள்ளனர். இதன்பேரில் அவரும், அவரது நண்பரும் டீலர்ஷிப்பிற்கு சென்று பைக்கை வாங்கியுள்ளனர்.

தனது தந்தைக்கு பரிசளிப்பதற்காக இந்த மகன் வாங்கியது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக் ஆகும். க்ரோம் மற்றும் கருப்பு வண்ணத்தில் அவர் பைக்கை தேர்வு செய்துள்ளார். பார்ப்பதற்கே கவர்ச்சிகரமான தோற்றத்தில் அந்த பைக் உள்ளது. டீலர்ஷிப்பில் ஆவணங்கள் குறித்த வேலைகள் முடிந்தவுடன் பைக்கை டெலிவரி எடுத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டை அடைந்தவுடன் பைக்கை வெளியே நிறுத்தி விட்டு மகன் உள்ளே சென்று தனது தந்தையை அழைத்து வந்துள்ளார். பைக்கை பார்த்ததும் அந்த தந்தைக்கோ ஆச்சரியம். இது தனது மகன் தனக்காக வாங்கிய பரிசு என்பதை அறிந்ததும், பைக்கை எடுத்து கொண்டு அந்த தந்தை கொஞ்ச தூரம் சென்று வந்தார். திரும்பி வருகையில் அவரது முகம் பிரகாசத்தில் ஒளிர்ந்தது.

இதன்பின்பு தந்தையும், மகனும் ஒன்றாக இணைந்து அந்த பைக்கில் பயணம் செய்துள்ளனர். மகனின் இந்த செயல் மூலம் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்தது. அவர்களின் முகத்திலேயே அந்த உற்சாகத்தை காண முடிகிறது. யூ-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணக்கமான 346 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 20 பிஎஸ் பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக்குகளில் ஒன்றாக இது திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








