நேரம் பார்த்து அடிக்குறாங்க... கொரோனா சமயத்தில் எவ்வளவு உதவி செய்திருப்பாரு! பைக் ஓட்டியது ஒரு பிரச்சனையா?
பாலிவுட் நடிகர் (Bollywood Actor) சோனு சூட் (Sonu Sood) அவர்களை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் சமயத்தில் பொது மக்களுக்கு உதவி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சோனு சூட் ஆவார். இவர் தான் தற்போது போலீசாரின் நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார். சாலையில் பைக் ஓட்டியதற்காக சோனு சூட் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர். என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் அதனை பற்றி விரிவாக காணலாம்.
நடிகர் மட்டுமல்ல, சோனு சூட் பாலிவுட்டின் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். கொரோனா காலத்திற்கு பிறகும் உதவி என்று கேட்டுவரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை செய்வதன் மூலம் இந்தியா முழுவதும் சோனு சூட் மீது நல்ல அபிபிராயம் உள்ளது. இருப்பினும், சோனு சூட் இத்தனை நல்லது செய்வதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது, இவரிடம் எவ்வாறு கோடிக்கணக்கில் தானமாக வாரி வழங்கும் அளவிற்கு பணம் உள்ளது என்கிற கேள்விகளை எழுப்புவோரும் இருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், 2023ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றிற்காக தற்போது நடிகர் சோனு சூட் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். இயற்கை அழகு கொஞ்சும் ஹிமாச்சல் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியில் 2023இல் நீல நிற யமஹா எஃப்.இசட்.எக்ஸ் (Yamaha FZX) பைக்கை உடம்பில் மேலாடை எதுவும் இன்றி நடிகர் சோனு சூட் ஓட்டியுள்ளார்.
அவருடன் அந்த சமயத்தில் மேலும் சில ரைடர்களும் தங்களது பைக்குகளை ஓட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது பைக் ரைடிங் கிட்டை முறையாக அணிந்து இருந்துள்ளனர். ஆனால், நடிகர் சோனு சூட் மட்டும் சட்டை அணியாமல், வெறும் ஷார்ட்ஸ் உடன் கூலிங் கிளாஸ் அணிந்தப்படி யமஹா பைக்கை ஓட்டியுள்ளார்.

சினிமா ஹீரோ என்பதால், மற்ற ரைடர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செய்திருக்கலாம். ஆனால் அதுதான் தற்போது 2 வருடங்கள் கழித்து அவருக்கே பிரச்சனையாக முடிந்துள்ளது. 2023இல் சோனு சூட் அவ்வாறு பைக்கை ஓட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டதும் அவரே ஆவார்.
"இது ஸ்பிதி, உண்மையான மக்கள் மட்டுமே இங்கே வரவேற்கப்படுகின்றனர்" என்கிற கேப்ஷன் உடன் 2023இல் சோனு சூட் வெளியிட்ட இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். சோனு சூட்டிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் முன் வைக்கும் காரணம் என்னவென்றால், இவ்வாறான செயல்கள் இன்றைய கால இளம் தலைமுறையினருக்கு தவறான முன் உதாரணமாக அமையக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் (Helmet) அணிவது மிகவும் அவசியமாகும். அதுவும், ஸ்பிதி பள்ளத்தாக்கு போன்ற கரடு முரடான சாலைகளில் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் கட்டாயம் ஆகும். ஆனால், சட்டையையே அணியாதவரிடம் ஹெல்மெட்டை எதிர்பார்க்க முடியுமா... பொது சாலையில் பைக் ஓட்டுபவர்கள் சட்டை அணியாததும் போக்குவரத்து விதிமுறைப்படி குற்றமாகும்.
ஏனெனில், இது மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதனாலேயே ஸ்பிதி நகர போலீசார் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணையை மேற்கொள்ளும்படி டிஎஸ்பி கைலாங் என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆதலால், வரும் நாட்களில் இந்த வழக்கு விசாரணை குறித்த அடுத்தக்கட்ட அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது மக்களுக்கும், இன்றைய கால இளம் தலைமுறையினருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய நடிகர்களே இப்படி நடந்துக் கொள்வது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பைக் ஓட்ட விரும்புபவர்கள் ஏதேனும் மூடிய வளாகத்திற்குள் ஜாலியாக மேற்கொள்ளலாம். பொது இடத்தில், அதுவும் ஸ்பிதி பள்ளத்தாக்கு போன்ற சென்ஸிடீவ்வான பகுதியில் இவ்வாறு நடத்து கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இருப்பினும், 2 வருடங்கள் கழித்து விசாரணையை துவங்கி இருப்பது போலீசார் மீது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








