எல்லாருக்கும் அல்லு விட்ருக்கும்... விமானத்தின் கதவை திறந்த பயணி!! ஐய்யோ பாவம்... இதுதான் காரணமா?
லேண்டிங் ஆகும்போது பயணி ஒருவர் விமானத்தின் கதவை திறந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான கேபின் பணியாளர்களின் அவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அந்த நபர் இதை செய்தார்? பிறகு அந்த பயணி என்ன ஆனார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
பொதுவாக, விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங்கின் போதும் தான் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும் என கூறுவர். என்னதான் பலமுறை பல்வேறு விமானங்களை டேக்-ஆஃப்/ லேண்டிங் செய்திருந்தாலும், எந்தவொரு விமானிக்கும் விமானத்தை விண்ணிற்கு கொண்டு செல்லும் போதும், விண்ணில் இருந்து தரைக்கு கொண்டுவரும் போதும் ஓர் சிறிய படபடப்பு இருக்கதான் செய்யும்.

இதனாலேயே அத்தகைய நேரங்களில் விபத்துகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதால், பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளை விட்டு எழ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். அப்படியிருந்தும், தென் கொரியாவில் பயணி ஒருவர் தான் பயணித்து கொண்டிருந்த விமானத்தின் கதவை லேண்டிங்கின் போது திறந்துள்ளார். இந்த நிகழ்வை விமானத்திற்குள் இருந்த மற்ற பயணிகள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, தற்போது அது வைரலாகி வருகிறது.
மொத்தம் 194 பயணிகளுடன் தென் கொரியாவுக்கு சொந்தமான ஜேஜு தீவில் இருந்து டேய்கு நகரத்திற்கு ஆசியானா ஏர்லைன்ஸின் விமானம் ஒ.இசட்8124 வழக்கம்போல கடந்த மே 26ஆம் தேதி உள்ளூர் நேரப்படி நண்பகல் 11:45 மணியளவில் புறப்பட்டுள்ளது. பின்னர், டேய்கோ சர்வதேச விமான நிலையத்தையும் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. விமானம் லேண்டிங் ஆகி கொண்டிருந்த நேரத்தில் விமானத்தினுள் இருந்த 30 வயதான ஆண் பயணி ஒருவர் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து, விமானத்தின் இடதுபக்க கதவை திறந்துள்ளார்.

இதனை கண்ட மற்ற பயணிகளும், விமான கேபின் பணியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அந்த சமயத்தில் விமானத்திற்கும் தரைக்கும் இடையே கிட்டத்தட்ட 250 மீட்டர் இடைவெளி இருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் மற்றவர்களால் அந்த நபரை தடுக்க முடியவில்லை. 250 மீட்டர் உயரம் தான் என்பதால் பெரியதாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. விமானம் லேண்டிங் ஆகும் வரையில் கதவு திறந்தே இருந்துள்ளது.
விமானம் தரையிறக்கப்பட்டதும் கதவுக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்களிடம் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுள் சிலர் அதன்பின் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், 250 மீட்டர் தான் என்றாலும், திறக்கப்பட்ட கதவிற்கு அருகே அமர்ந்திருந்தவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

எந்தவொரு பயமும் இன்றி கதவை திறந்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் விசாரித்ததில், வேலையை இழந்த சோகத்தில் இவ்வாறு செய்துள்ளதாக அந்த நபர் கூறியுள்ளார். அதாவது, அவரது எண்ணம் கதவை திறந்து அனைவரையும் கொல்ல வேண்டும் என்பதில்லை, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்வதாக இருந்துள்ளது. கதவை திறந்தவுடன் அந்த நபர் கீழே குதிக்க முற்பட்டதாக பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உலகில் தொழிற்நுட்பம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் விமானத்தின் கதவுகளை ஒரு டச் மூலமாக திறந்துவிடலாம் என இருப்பது ஏற்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் இவ்வாறான சம்பவங்களை சமீப காலமாக அவ்வப்போது பார்த்து வருகிறோம். கதவுகளை விமானி அல்லது கேபின் பணி குழுவினரால் மட்டுமே திறக்க முடியும் வகையில் தொழிற்நுட்ப கருவியை கண்டுப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications









