மதுரை மண்ணின் பாசம்... மூணு மாசமா ஸ்கூட்டரை தொடாத வழக்கறிஞர்... காரணத்தை கேட்டு நெகிழும் மக்கள்...
மதுரை வழக்கறிஞர் ஒருவர் மூன்று மாதங்களாக தனது ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். இதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய அவசர உலகில் நம்மால் வாகனங்களை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது. அலுவலகத்திற்கு செல்வதாகட்டும் அல்லது காய்கறி வாங்குவதற்கு மார்க்கெட் செல்வதாகட்டும், அனைத்து வேலைகளுக்கும் நமக்கு வாகனங்கள் தேவை. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் கடைசியில் இருந்து நாம் வாகனங்களை பயன்படுத்துவது குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த மே மாத தொடக்கம் வரை இந்த ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்பட்டது. தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

எனினும் மே முதல் வாரத்தில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கின. இதனால் அதற்கு பின் வாகன போக்குவரத்து கொஞ்சம் சீரானது. தற்போதும் வாகனங்களை இயக்குவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், நிலைமை முன்பு போல் கடுமையாக இல்லை. நாம் மீண்டும் ஓரளவிற்கு வாகனங்களை ஓட்ட தொடங்கி விட்டோம்.

ஆனால் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக தனது இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அப்படியே நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணம் கிடையாது. சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டிய காரணத்தால்தான், அவர் 3 மாதங்களாக இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அப்படியே நிறுத்தி வைத்துள்ளார்.

மதுரை உலகனேரி பகுதியை சேர்ந்தவர் அருண் சுவாமிநாதன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்கூட்டர் ஒன்றை அவர் வைத்துள்ளார். அந்த ஸ்கூட்டரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியது. ஆனால் அதனை அகற்றுவதற்கு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதனுக்கு மனம் வரவில்லை.

எனவே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவரது ஸ்கூட்டர் அந்த இடத்திலேயே நின்று கொண்டுள்ளது. அந்த இடத்தை விட்டு அவர் ஸ்கூட்டரை நகர்த்தவே இல்லை. தற்போது சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது. எனவே தனது இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த மாட்டேன் என வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதனுக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன. சிட்டுக்குருவிக்காக ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருக்கும் வழக்கறிஞர் குறித்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
தற்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஆனால் செல்போன் கதிர்வீச்சு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் வேகமாக அழிந்து கொண்டுள்ளது. இந்த சூழலில், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக தனது டூவீலரை 3 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான்.


Click it and Unblock the Notifications








