இந்த டாடா காரை ஓட்ட கை மட்டும் போதும்... 2 கால்களும் செயல் இழந்த இளைஞர் வரலாற்றை திருத்தி எழுதினார்
2 கால்களும் செயல் இழந்த இளைஞர் ஒருவர் கார் ஓட்டி வருகிறார். அவரது டாடா காரை ஓட்ட கை மட்டுமே போதுமானது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். வாகனங்களை இயக்குவதில் நமக்கு பெரிய அளவில் பிரச்னைகள் எதுவும் இருப்பதில்லை. ஆனால் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

வாகனங்களை இயக்க அவர்களின் உடல் ஒத்துழைப்பதில்லை. எனவே வாகனங்களை இயக்குபவர்களை அவர்கள் ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஜெயேஷ் அப்படிப்பட்டவர் கிடையாது. பல தடைகளை கடந்து வாகனம் இயக்கி வருகிறார். ஆம், இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரின் நெகிழ்ச்சி பின்னணியும், இவர் சந்தித்த போராட்டங்களும் உங்களுக்கு உத்வேகம் அளிக்கலாம்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர்தான் ஜெயேஷ். பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த சூழலில், போலியோ காரணமாக அவரது இரண்டு கால்களும் செயலிழந்தன. ஆனால் வயது ஆக ஆக வாகனங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஜெயேசுக்கு ஏற்பட்டது. ஆனால் வாகனம் இயக்க வேண்டுமென்ற அவரின் ஆசைக்கு நமது சட்டம் தடை போட்டது.

18 வயது ஆன போது, ஜெயேஷ் ஸ்கூட்டரை ஓட்ட தொடங்கினார். இதற்காக சிறப்பு அனுமதி பெற முயற்சித்த போதும் கூட, அதிகாரிகளின் முடிவு அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த 'ரெஸ்பான்ஸ்' ஜெயேஷின் நம்பிக்கையை குலைக்கும் வகையில்தான் இருந்தன. ஆனால் அதற்காக ஜெயேஷ் ஒருபோதும் சோர்ந்து விடவில்லை.

குறிப்பாக கார்களை ஓட்ட வேண்டும் என்பதில்தான் ஜெயேஷ் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே மாருதி சுஸுகி ஆல்டோ கார் ஒன்றை ஜெயேஷ் வாங்கினார். அதில் சிறப்பு உபகரணம் ஒன்றை பொருத்தினார். காரை இயக்க ஜெயேசுக்கு இது உதவியது. ஜெயேஷ் சமீபத்தில் வாங்கியுள்ள கார் டாடா நெக்ஸான்.

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் ''மேட் இன் இந்தியா'' கார் என்ற பெருமை டாடா நெக்ஸானைதான் சேரும். ஜெயேஷை பொறுத்தவரை டாடா நெக்ஸான் அவருக்கு மிகவும் சௌகரியமாக உள்ளது. பவர் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் டாடா நெக்ஸான் தலை சிறந்து விளங்குவதாக ஜெயேஷ் கூறுகிறார்.

இதுகுறித்து ஜெயேஷ் கூறுகையில், ''ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கூட கார்களை ஓட்டுவதை விரும்புகிறேன். ஆனால் என்னிடம் சொந்தமாக இருப்பது பாதுகாப்பான கார் என்பதை நான் உறுதி செய்து கொள்ள வேண்டும். டாடா நெக்ஸான் காரின் சௌகரியம், பாதுகாப்பு, சத்தமில்லாத அமைதியான பயணம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது'' என்றார்.

ஜெயேஷ் வைத்திருக்கும் டாடா நெக்ஸான் காரில் சிறப்பு உபகரணம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. காரை அவர் எளிதாக இயக்க இது உதவி செய்கிறது. ஜெயேஷிடம் உள்ள டாடா நெக்ஸான் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் ஆகும். பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட லிவர் ஒன்று இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

கால்களால் இயக்க கூடிய கண்ட்ரோல்களை கைகளால் கட்டுப்படுத்த இந்த லிவர் உதவுகிறது. காரின் பிரேக் மற்றும் ஆக்ஸலரேட்டருடன் இந்த லிவர் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கைகளால் தள்ளினால், இந்த லிவர் ஆக்ஸலரேட்டராக செயல்படும். அதே சமயம் இதனை இழுக்கும்போது இது பிரேக் ஆக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் டாடா நெக்ஸான் காரை ஜெயேஷ் எளிதாக இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் பயிற்சியின் மூலம் ஜெயேஷ் அதனை எளிதாக்கி கொண்டார். இருந்தபோதும் கார்களில் இது போன்ற மாடிபிகேஷன்களை செய்ய நம் நாட்டு சட்ட திட்டங்களை அனுமதிப்பது கிடையாது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அராய் (Automotive Research Association of India - ARAI) அமைப்பிடம் ஜெயேஷ் கடிதம் ஒன்றை வாங்கினார். அதன்பின் இந்த செயல்முறையை முற்றிலும் சட்டப்பூர்வமானதாக மாற்ற இந்த கடிதத்துடன் அவர் உள்ளூர் ஆர்டிஓ-வை அணுக வேண்டியதிருந்தது.

தற்போது காசர்கோட்டில் இருந்து பூடான் வரை பயணிக்க வேண்டும் என ஜெயேஷ் திட்டமிட்டு வருகிறார். மொத்த தொலைவு எவ்வளவு தெரியுமா? தோராயமாக 7 ஆயிரம் கிலோ மீட்டர்கள். மக்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்பதற்காக இதுபற்றி ஜெயேஷ் யோசித்து வருகிறார். அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற நாம் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications








