வேகமாக வந்த கார் மோதியதில் புலி உயிரிழப்பு... டிரைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தெரியுமா?
வேகமாக வந்த கார் மோதியதில் புலி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில், கடந்த 6ம் தேதியன்று கார் மோதியதில் 12 வயதான புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் கடந்த 6ம் தேதி இரவு 9 மணியளவில், ராம்நகர்-நைனிடால் நெடுஞ்சாலையில் (கார்பெட் புலிகள் காப்பக பகுதி) பயணித்து கொண்டிருந்தபோது புலியின் மீது மோதியது.

விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர்கள் தொலைவில் புலியின் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் புலியின் உடல் தகனம் செய்யப்பட்டது. விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த நபர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்திற்கு காரணமான காரையும் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் புலி உயிரிழந்திருக்கும் சம்பவம், வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புலிகளின் அடர்த்தி அதிகமாக உள்ள காப்பகங்களில், கார்பெட் புலிகள் காப்பகமும் ஒன்று. அங்கு சமீப காலமாக மனிதர்கள்-புலிகள் இடையேயான மோதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்பெட் புலிகள் காப்பக பகுதியில், வனத்துறை அதிகாரிகள் உள்பட மனிதர்களை புலிகள் பலமுறை தாக்கியுள்ளன.

சில சமயங்களில் மனிதர்களை புலிகள் படுகாயமடைய செய்கின்றன. உயிரிழப்பையும் கூட ஏற்படுத்துகின்றன. மனிதர்களாலும் புலிகளுக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. புலிகள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தீவிரமாக எடுத்துரைக்கப்பட்டு வரும் நிலையில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் வன ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளன.

புலிகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் சூழலில், வனப்பகுதிகளின் வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மனிதர்களால் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கோ அல்லது வன விலங்குகளால் மனிதர்களுக்கோ என இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே சாதாரண பகுதிகளில் வாகனம் ஓட்டுவதை விட வன விலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது இன்னும் கவனமாக இருங்கள். வன விலங்குகளின் உயிரிழப்பிற்கு நீங்கள் காரணமாக இருந்தால், உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கார்பெட் புலிகள் காப்பக பகுதியில் தற்போது நடைபெற்றுள்ள விபத்திற்கு, கார் அதிவேகத்தில் வந்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஓட்டுனரால் வேகத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் புலியின் மீது மோதியிருக்கலாம். எனவே விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க விதிமுறைகளுக்கு உட்பட்ட வேகத்தில் பயணம் செய்யுங்கள். குறிப்பாக இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வன பகுதிகளின் வழியாக வாகனங்களில் பயணம் செய்யும்போது, அங்கு வசிக்கும் விலங்குகளுக்கு மரியாதை கொடுப்பது அவசியமானது. வன விலங்குகள் நம்முடைய இருப்பிடத்திற்கு வரவில்லை. நாம்தான் அவற்றின் இருப்பிடத்திற்கு சென்றுள்ளோம் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். இடைவிடாமல் ஹாரன் அடிப்பது போன்ற சேட்டைகளை செய்து வன விலங்குகளின் கோபத்திற்கு ஆளாகி விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








