ஃபெராரி கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த வாட்ச்மேன்... விபத்துக்கு காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க
ஃபெராரி கார் மோதியதில், காவலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகள் நிகழும் நாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சீட்பெல்ட் மற்றும் தலைகவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறுப்பது ஆகியவையே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

இதுதவிர அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதும், சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் உரிமையாளர்கள் சிலர், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி வருகின்றனர். முன்பெல்லாம் இந்தியாவில் இத்தகைய கார்களை காண்பதே அரிதாக இருக்கும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எனினும் ஃபெராரி மற்றும் லம்போர்கினி உள்ளிட்ட நிறுவனங்களின் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் தற்போது அதிகமாக காண முடிகிறது. இதில் ஒரு சிலர், சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை அதிவேகத்தில் இயக்குவதையும், பொது சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் நகரில் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் மோதியதில், 50 வயதான நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை மாலை (அக்டோபர் 11) இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கார் அதிவேகத்தில் வந்ததுதான் இந்த விபத்திற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் காரின் ஓட்டுனர் பொறுப்பற்ற முறையில், வாகனத்தை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் பெயர் யேசு பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் ஒரு கட்டிடத்தில், காவலாளியாக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்த ஃபெராரி சொகுசு ஸ்போர்ட்ஸ் கார், யேசு பாபுவின் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய நவீன் குமார் மாதப்பூர் பகுதியில் இருந்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காவலாளி யேசு பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய ஃபெராரி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரின் ஓட்டுனர் நவீன் குமார், காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக காவல் துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர். சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுனர் அலட்சியம் காரணமாக காவலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒரு நபர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய சாலைகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குவது அவசியம். அந்தந்த சாலைகளின் வேக கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் இதுபோன்ற சாலை விபத்துக்களை தவிர்க்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டதை போல், சமீப காலமாக சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுனர்கள், தங்களது இத்தகைய செயல்பாடுகள் காரணமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
உயிர்களின் மதிப்பை அவர்கள் உணர வேண்டிய நேரமிது. பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த கார்களின் செயல்திறனை முழுமையாக அனுபவிக்க விரும்பினால், அதற்கு ரேஸ் டிராக்குகளை தேர்வு செய்யலாம். அதை விடுத்து விட்டு, பொது சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பதும், அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதும் ஆபத்தானது.


Click it and Unblock the Notifications








