சம்பளம் கிடையாது... 80 விமானிகளை வீட்டிற்கு அனுப்பும் ஸ்பைஸ் ஜெட்!! ஓஹோ... இதுதான் காரணமா?
80 விமானிகளை சம்பளமின்றி 3 மாதத்திற்கு கட்டாய விடுப்பில் அனுப்ப உள்ளதாக பிரபல ஏர்லைன் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்பைஸ் ஜெட், இந்தியாவில் பயணிகள் விமானங்களை இயக்குவதில் 2வது இடத்தில் உள்ள ஏர்லைன் நிறுவனம். தினந்தோறும் 630 விமானங்களை, மொத்தம் 64 வழித்தடங்களில் இயக்கும் ஸ்பைஸ் ஜெட் தனது செயல்பாட்டு தளங்களை தேசிய தலைநகர் டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் கொண்டுள்ளது.

இத்தகைய பிரபலமான இந்திய ஏர்லைன் நிறுவனம் தான் தற்போது தனது விமானங்களை இயக்கும் 80 விமானிகளை 3 மாத காலத்திற்கு கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவெடுத்துள்ளது. பொதுவாக விமானிகள் மாதக்கணக்கில் கூட விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதாவது தொடர்ச்சியாக பணி புரிந்திருந்தாலோ அல்லது விடுமுறை தேவைப்பட்டாலோ மாதக்கணக்கிலும் அவர்களால் விடுப்பை எடுத்து கொள்ள முடியும்.

விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து ஏர்லைன் நிறுவனம் சம்பளம் அளிக்கும். ஆனால் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் 80 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்கு 3 மாத காலத்திற்கு சம்பளம் கிடையாதாம். இருப்பினும், மற்ற பணியாளர் சலுகைகளை பெற முடியும் என ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது. அதாவது, இன்ஸ்சூரன்ஸ் சலுகைகள் உள்ளிட்டவற்றை இந்த 3 மாதத்திற்கு அவர்களால் பெற்று கொள்ள முடியும்.

ஆதலால், எந்தவொரு விமானியையும் வேலையை விட்டு நீக்கவில்லை என ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் பதிலளித்த நிர்வாகி ஒருவர், "கொரோனா தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது கூட எந்தவொரு பணியாளரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது என்பதை ஸ்பைஸ் ஜெட் உறுதியாக பின்பற்றியது.

விமான நிறுவனத்தின் அந்த கொள்கைக்கு இணங்க இருக்கும் இந்த நடவடிக்கை ஆனது விமானங்களின் எண்ணிக்கைக்கு விமானிகளின் வலிமையை பகுத்தறிவுப்படுத்த உதவும்" என தெரிவித்துள்ளார். 2019இல், 737 மேக்ஸ் விமானம் உள்பட மொத்தம் 30 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் வாங்கியது.

தற்போது விமானிகளின் பணிகளை ஸ்பைஸ் ஜெட் ஒழுங்குப்படுத்துவதும், 737 மேக்ஸ் விமானத்தை மீண்டும் சேவைக்கு கொண்டுவருவதில் ஒரு பகுதியே. 737 மேக்ஸ் விமானம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதினாலேயே அதிகளவில் கூடுதல் விமானிகளை ஸ்பைஸ்ஜெட் பணியமர்த்தியது. "மேக்ஸ் விமானம் விரைவில் பயன்பாட்டிற்கு வந்த பின், இந்த விமானிகள் மீண்டும் சேவைக்கு திரும்புவார்கள்.

இந்த விடுப்பு காலக்கட்டத்தில் இன்ஸ்சூரன்ஸ் சலுகைகள் மற்றும் பணியாளர் விடுமுறை பயணம் உள்ளிட்ட மற்ற பணியாளர் சலுகைகளுக்கு விமானிகள் தகுதியுடையவர்கள் ஆவர்" என அந்த ஸ்பைஸ் ஜெட் நிர்வாகி கூறியுள்ளார். வருகிற அக்.29ஆம் தேதி வரையில் 50 சதவீத விமானங்களை மட்டுமே ஸ்பைஸ் ஜெட் இயக்க வேண்டும் என DGCA சமீபத்தில் ஆணையிட்டதை தொடர்ந்து, தற்போது 80 விமானிகளை விடுப்பில் அனுப்ப ஸ்பைஸ் ஜெட் திட்டமிட்டுள்ளது.

இதனால் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி, விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் போதுமான விமானிகளை வைத்து கொள்ள உள்ளது. முன்னதாக, நடப்பு 2022-23ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) சுமார் ரூ.789 கோடி நிகர நஷ்டத்தை அடைந்துள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்திருந்தது. அதேபோல், கடந்த 2021-22 நிதியாண்டிலும் முதல் காலாண்டில் ரூ.729 கோடியில் நஷ்டத்தை இந்த ஏர்லைன் நிறுவனம் கண்டது.

இவ்வாறான நஷ்டங்களினால் பெரிதும் பாதிப்படைந்துவரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அதிகப்படியான எரிபொருள் விலையையும், தொடர்ந்து குறைந்துவரும் இந்திய ரூபாய் மதிப்பையும் இந்த நஷ்டங்களுக்கான காரணங்களாக தெரிவிக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருவாய் என்று பார்த்தால், ரூ.2,478 கோடிகளாகும்.

அதுவே கடந்த ஆண்டில் ரூ.1,266 கோடியை வருவாயாக ஸ்பைஸ் ஜெட் ஈட்டி இருந்தது. இருப்பினும் கடந்த 2 வருடத்திலும் ஏப்ரல்-ஜூன் மாத காலக்கட்டத்தில் நஷ்டத்தை ஸ்பைஸ் ஜெட் சந்தித்துள்ளது. ஏனெனில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,267 கோடியையும், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,995 கோடியையும் இயக்க செலவாக ஸ்பைஸ் ஜெட் செலவழித்து இருந்தது.


Click it and Unblock the Notifications








