கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 கோடியை எட்டிய ஒன்றிய அரசு- போயிங் விமானங்களில் ஸ்பெஷல் கிராஃபிக்ஸ் அறிமுகம்
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசாங்கம் 100 கோடி என்ற இமாலய எண்ணிக்கையை எட்டி இருப்பதை கொண்டாடும் விதமாக போயிங் 737 விமானங்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதிய ஸ்பெஷல் கிராஃபிக்ஸை வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா முதல் அலை, இரண்டாவது அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை வரவுள்ளதாக பீதி கிளம்பி வருகிறது. ஆனால் முன்பு இருந்த பயம் மக்களுடன் அரசாங்கத்திற்கும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிக்கரமாக 100 கோடியை ஒன்றிய அரசாங்கம் நிறைவு செய்துள்ளது. இதனை நினைவுக்கூறும் விதமாகவும், மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் விதமாகவும் போயிங் 737 விமானங்களுக்கு பிரத்யேகமான கிராஃபிக்ஸை கடந்த அக்.21 ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்துடன், மருத்துவ பணியாளர் ஒருவரும், அவருக்கு அருகில் பெண் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்துவது போன்றும் இந்த கிராஃபிக்ஸ் அமைந்துள்ளது. மொத்தம் மூன்று போயிங் 737 விமானங்களுக்கு இந்த ஸ்பெஷல் கிராஃபிக்ஸை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கொடுத்துள்ளது.

இந்த விமானங்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஜய் சிங் தலைமை வகித்தனர். அப்போது பேசிய அஜய் சிங், "வெறும் 279 நாட்களில் 100 கோடி டோஸ் மைல்கல்லை எட்டுவது சுகாதார ஊழியர்களின் தொடர் முயற்சிகள் மற்றும் குடிமக்களின் ஒத்துழைப்புக்கு சான்றாகும்.

ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஸ்பைஸ்ஹெல்த் உள்ளிட்ட எங்கள் முன்கள பணியாளர்கள் மற்றும் கொரோனா போர்வீரர்களின் பங்களிப்பு சிறப்புக்கு உரியது மற்றும் பாராட்டப்பட வேண்டும். எங்களது இந்த அறிமுகம் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி பணிகளின் வெற்றிக்கு ஒரு சிறிய அஞ்சலியாகும்" என்றார்.

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசாங்கம் 100 கோடியை கடந்த அக்.21ஆம் தேதி எட்டியது. இந்தியாவில் தற்சமயம் 75 சதவீதத்தினர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 31 சதவீதத்தினருக்கும் கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.

சில உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது துவங்கியதை அடுத்து இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி வழங்குவதை ஒன்றிய அரசு ஆரம்பித்தது. முதலாவதாக சுகாதார துறை ஊழியர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். அதன்பின் பிப்ரவரி 2ஆம் தேதியில் இருந்து முன்கள பணியாளர்கள் பெற்று கொண்டனர்.

இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 138 கோடிக்கு மேல் உள்ளது. அப்படியென்றால் கிட்டத்தட்ட 275 கோடி கொரோனா தடுப்பூசியின் டோஸ்களை மக்களுக்கு, மத்தியில் ஆளும் அரசு வழங்க வேண்டும். இது நிச்சயம் மிக பெரிய சவாலான விஷயமே. இதில் தற்போது 100 கோடி என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் விஷயத்தில் ஒன்றிய அரசாங்கம் மிகவும் முனைப்புடன் தீவிரமாக உள்ளதால், 200 கோடி என்ற மைல்கல் நடப்பு 2021ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாகவே எட்டப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. முன்னணி விமான சேவை நிறுவனமாக விளங்கும் ஸ்பைஸ்ஜெட்-ஐ பொறுத்தவரையில், சந்தை பங்கை காட்டிலும் இலாபம் காணுவதே தங்களது நோக்கம் என அஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதன் அர்த்தம் என்னவென்றால், சந்தை பங்கின் வீழ்ச்சியை பற்றி அஜய் சிங் கவலைப்படவில்லை, விமான நிறுவனத்துடன் இணைந்து சந்தை பங்கு வளரும் என அவர் நம்பிக்கையாக உள்ளார். மேலும் பேசிய ஸ்பைஸ்ஜெட் தலைவர், சரக்கு வியாபாரம் வளர்ந்து வருவதாகவும், அது தொடர்ந்து செல்லும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

விமான போக்குவரத்து துறையில் முக்கியமான செய்தியாக டாடா க்ரூப் மீண்டும் ஏர் இந்தியாவை சமீபத்தில் சொந்தமாக்கியது. இதுகுறித்து பேசிய அஜய் சிங், உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக டாடா உருவெடுக்கும் என உறுதியாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








