ஆமணக்கு எண்ணெயில் இயங்கிய இந்தியாவின் முதல் பயணிகள் விமானம்!
நாட்டிலேயே முதல்முறையாக, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனிலிருந்து தலைநகர் டெல்லிக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் உயிரி எரிபொருள் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக உயிரி எரிபொருளில் பயணிகள் விமானம் இயக்கி சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாசு உமிழ்வை குறைப்பதற்கான முயற்சியாக உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பஸ் மற்றும் ரயில் எஞ்சின்களில் பயோ ஃப்யூவல் எனப்படும் தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கலக்கப்பட்ட உயிரி எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இது வெற்றிகரமாகவும் அமைந்துள்ளது.

இதன்தொடர்ச்சியாக, விமானத்திலும் உயிரி எரிபொருளுடன் இயக்கும் முயற்சி முதல்முறையாக இந்தியாவில் பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனிலிருந்து தலைநகர் டெல்லிக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் உயிரி எரிபொருள் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது.

ஆமணக்கு எண்ணெய் கலக்கப்பட்ட 25 சதவீத உயிரி எரிபொருள் மற்றும் ATF எனப்படும் வழக்கமான டர்பைன் எரிபொருள் 75 சதவீதம் அளவுக்கு கலந்த எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான பம்பார்டியர் Q-400 என்ற விமானத்தில்தான் இந்த உயிரி எரிபொருள் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட உயிரி எரிபொருள் ஆமணக்கு விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. டேராடூன் நகரில் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகம் இந்த எரிபொருளை தயாரித்து கொடுத்துள்ளது.

இந்த புதிய பயோ எரிபொருள் மூலமாக கார்பன் வெளியீட்டை 15 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும் என்று விமானத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எதிர்காலத்தில் எரிபொருள் பயன்பாட்டில் 50 சதவீத தேவையை இந்த உயிரி எரிபொருளை வைத்து பூர்த்தி செய்ய முடியும்.

உயிரி எரிபொருட்கள் விலை மலிவாக இருப்பதும் பொருளாதார ரீதியில் விமான நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் சாதகமான விஷயமாக அமையும். சாதாரண விமான பெட்ரோல் அளவுக்கு தொழில்நுட்ப அளவிலும் இவை திறன் வாய்ந்ததாக இருப்பதால், படிப்படியாக இந்த எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் விமான சேவைகளும் விரிவடைந்து வருகின்றன. இந்த சூழலில், விலை குறைவான உயிரி எரிபொருள் மூலமாக, விமானப் பயணக் கட்டணத்தை மிக சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

எனவே, சிறிய நகரங்களுக்கு இடையிலான சேவையை விரிவாக்குவதற்கு இந்த உயிரி எரிபொருள் பயன்பாடு சிறந்த தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலிய பொருட்கள் விலை இந்தியாவில் எகிறி வரும் இச்சூழலில், இந்த உயிரி எரிபொருள் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது வரவேற்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகள் இந்த உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், டச்சு ஏர்லைன்ஸ், காந்தாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் உயிரி எரிபொருள் மூலமாக விமானங்களை இயக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளன.

உயிரி எரிபொருட்கள் பல உயிரி மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. அதில், ஆமணக்கு விதைகளிலிருந்து பெறப்படும் எரிபொருள் மற்றவற்றைவிட சற்று விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








