கார் சர்வீஸ் சென்டருக்கு வந்த பரிசு! அனுப்புனது யார்னு தெரிஞ்சதும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போன ஊழியர்கள்!
இந்திய மக்களை பொறுத்தவரையில் புதிதாக ஒரு கார் வாங்குவது என்பது பலருக்கும் பெரும் கனவு. உண்மையில் இந்த கனவு நிறைவேறும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் கார் வாங்கிய பிறகு எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்பு செலவு ஆகிய 2 விஷயங்களுக்கு பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும். உண்மையில் இது நிறைய பேருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் குறிப்பாக சர்வீஸ் சென்டர்களில் பலர் மிகவும் மோசமான அனுபவங்களை சந்திக்கின்றனர். இந்த மன உளைச்சல்களை எல்லாம் சமூக வலை தளங்களில் பலர் கொட்டி தீர்ப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
உண்மைதான். காரை கையாண்ட விதம் சரியில்லை, ரிப்பேர் செய்த விதம் சரியில்லை, கால தாமதம் செய்து விட்டனர் என்பது போன்ற சர்வீஸ் சென்டர்கள் மீதான கார் உரிமையாளர்களின் குற்றச்சாட்டுக்களை சமூக வலை தளங்களில் அதிகமாக காண முடியும். ஆனால் நன்றாக சர்வீஸ் செய்த மெக்கானிக்குகளை, கார் உரிமையாளர்கள் கௌரவித்து பார்த்துள்ளீர்களா?

அனேகமாக இந்த கேள்விக்கு பலரின் பதில் 'இல்லை' என்பதாகதான் இருக்கும். இப்படியான ஒரு அரிய சம்பவம் பெங்களூர் (Bangalore) நகரில் தற்போது நடைபெற்றுள்ளது. மைக்ரோஸ்டார்ட்அப்.காம் (MicroStartup.com) என்ற ஸ்டார்ட்அப் (Startup) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தீபக் கனகராஜூ.
இவர் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் (Volkswagen T-Roc). சமீபத்தில் இவரது கார் சாலை விபத்தில் சிக்கியது. பெங்களூர் நகரில் உள்ள சர்ஜாபூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதிய காரணத்தால், காரின் பின் பக்க டோர் மற்றும் டயர்கள் சேதமடைந்தன. இதனால் அருகே இருந்த ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் சென்டரில் அவர் காரை விட்டார்.

ஆரம்பத்தில் கார் சரி செய்யப்பட்டு மீண்டும் டெலிவரி செய்யப்பட ஒரு சில வாரங்கள் ஆகி விடும் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் சர்வீஸ் சென்டரில் இருந்த மெக்கானிக்குகள் வெகு விரைவாகவே காரை சர்வீஸ் செய்து வழங்கி விட்டனர். அத்துடன் காரை புதியது போலவும் மாற்றி கொடுத்து விட்டனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த தீபக் கனகராஜூ, அவர்களுக்கு ஸ்விக்கி (Swiggy) மூலம் கேக் ஒன்றை பரிசாக அனுப்பி வைத்தார். அத்துடன் சில சமயங்களில் கார் சர்வீஸ் சென்டர் மெக்கானிக்குகள் அபாகயரமான கெமிக்கல்கள் உள்ளிட்டவற்றுடன் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கின்றனர். எனவே அவர்களை பாராட்ட நாம் தவற கூடாது என்ற ரீதியில் லிங்டுஇன் (LinkedIn) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. முன்னதாக தீபக் கனகராஜூவிடம் இருந்து கேக்கை பரிசாக பெற்ற சர்வீஸ் சென்டர் ஊழியர்கள், அந்த கேக்குடன் நின்று புகைப்படம் எடுத்து, அதை தீபக் கனராஜூவிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். தீபக் கனகராஜூ, அந்த புகைப்படத்தையும் லிங்டுஇன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கு ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனமும் கமெண்ட் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ''இந்த பதிவை வெளியிட்டதற்காக நன்றி. ஒவ்வொரு கார் சரி செய்யப்படுவதற்கு பின்னாலும், திறமை வாய்ந்த டெக்னீசியன்களின் உழைப்பு உள்ளது. உங்களது இந்த பாராட்டு, அவர்களின் கடமை உணர்ச்சிக்கு கிடைத்த பரிசு'' என ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தீபக் கனகராஜூவின் செயல் உண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. உண்மையில் சில சமயங்களில், நமக்காக வேலை செய்பவர்களை நாம் பாராட்ட தவறி விடுகிறோம். யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் பாராட்ட வேண்டும் என்ற முன்மாதிரியை இதன் மூலமாக தீபக் கனகராஜூ ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து பரிசும், பாராட்டும் கிடைத்த காரணத்தால், ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருப்பார்கள் என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், மெக்கானிக்குகளை இது போன்று பாராட்டுவதில்லை. ஆனால் இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் எனவும் நாம் உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications








