வாகன விரும்பிகளுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட எஸ்பிஐ: முழு விபரம் உள்ளே!
வாகன விரும்பிகள் வரவேற்கும் வகையில் எஸ்பிஐ வங்கி புதிய கடன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பாரத ஸ்டேட் வங்கி 'பசுமை வாகன கடன்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 23) கொண்டாடப்படும் பூமி தினத்தை முன்னிட்டு இந்த புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பசுமை வாகன கடன் திட்டத்தின்மூலம், புதிதாக வாங்கவிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே எஸ்பிஐ வங்கிதான் இந்த திட்டத்தினை முதல் முறையாக தொடங்கி வைத்துள்ளது.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் கார்களுக்கு கடன் வழங்கும் விதமாக இந்த சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி தொடங்கியுள்ளது.

எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டுக்கு மாறுவது முக்கிய சூழலாக பார்க்கப்பட்டு வரும் இந்தநிலையில், எஸ்பிஐ வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு பெரிதும் வரவேற்கத் தகுந்ததாக இருக்கின்றது.

ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் முன்னதாக மின் வாகன பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சியில் அண்மைக் காலங்களாக ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு, மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் இந்த முயற்சியைத் தொடர்ந்து, பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் மின் வாகனங்களை இந்தியாவில் களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஜாம்பவான்களான டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் விரைவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

அதேசமயம், சந்தையில் விற்பனையாகி வரும் மின் வாகனங்கள் பிரம்மிக்க வைக்கும் அளவில் விலையைக் கொண்டிருப்பதால், மக்கள் பலர் அந்த வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த சூழலில் எஸ்பிஐ அறிவித்திருக்கும் இந்த புதிய கடன் திட்டம், மின் வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை வாகன கடன் திட்டத்தில் வழங்கப்படும் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகைப் பெற வருகின்ற நவம்பர் மாத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 8 வருடங்கள் வரை பணம் செலுத்தும் வகையில் இதற்கான கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications