இந்தியாவில் முதல் முறை... சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு கிடைக்கப்போகும் பெருமை...
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு மிகப்பெரிய பெருமை ஒன்று கிடைக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத் மாநிலத்தில் ஒற்றுமையின் சிலை அமைந்துள்ள பகுதியில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பகுதியாக ஒற்றுமையின் சிலை அமைந்துள்ள பகுதி உருவெடுக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஒற்றுமையின் சிலை பகுதி வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆளுகை ஆணையமும், இந்த பகுதியை வாகன மாசு இல்லாத பகுதியாக மேம்படுத்துவோம் என கூறியுள்ளது. ஒற்றுமையின் சிலை சுற்றியுள்ள பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவு படிப்படியாக அமலுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் பயணிப்பதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேபோல் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பேருந்துகளும் டீசலுக்கு பதில் பேட்டரி மூலம் இயங்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையின் சிலை பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை கூறினார். ஆனால் ஒற்றுமையின் சிலை பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கடந்த 2019ம் ஆண்டே பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் கீழ் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள மக்கள், எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்கு உதவி செய்யப்படும். மேலும் மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றுமையின் சிலை பகுதியில் முதற்கட்டமாக 50 எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களுக்கு ஓட்டுனர்களாக பணியாற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக பெண்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒர்க் ஷாப் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிகரித்து கொண்டே வரும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் தீர்வாக பார்க்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவு என்பதால், மக்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








