அதிசயம்... ஆனால் உண்மை... தொலைந்து போன கேடிஎம் பைக் வெறும் 30 மணி நேரத்தில் திரும்ப கிடைத்தது!
தொலைந்து போன கேடிஎம் பைக் வெறும் 30 மணி நேரத்தில் திரும்ப கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோட்டார்சைக்கிள் திருடு போவது என்பது மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடிய ஒரு நிகழ்வு. இது பொருளாதார ரீதியில் இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன், காவல் துறையில் புகார் அளிப்பது போன்ற சற்று கடுமையான நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டியிருக்கும். அத்துடன் தொலைந்து போன பைக் மீண்டும் கிடைக்கும் வரை அல்லது புதிதாக ஒன்றை வாங்கும் வரை தினசரி வேலைகளும் பாதிக்கப்படலாம்.

ஆனால் தொலைந்து போன மோட்டார்சைக்கிள் குறிப்பிட்ட காலத்திற்குள் உடனடியாக கிடைத்து விட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. எனினும் பெரும்பாலான மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது உடைமை திரும்ப கிடைப்பதில்லை. அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பாக்கியம் வாய்க்கிறது.

அப்படி ஒரு அதிர்ஷ்டம் கேடிஎம் பைக்கின் உரிமையாளர் ஒருவருக்கு சமீபத்தில் வாய்த்துள்ளது. ஆம், தொலைந்து போன அவருடைய கேடிஎம் பைக் சுமார் 30 மணி நேரங்களில் அவரது கைகளுக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஒரு சில வழக்குகளில், பைக்குகளை திரும்ப கண்டுபிடிக்க மாத கணக்கிலோ அல்லது வருட கணக்கிலோ கூட காலம் ஆகும். சில சமயங்களில் பைக் கிடைக்காமலும் கூட போகலாம்.

இதை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, 30 மணி நேரத்தில் பைக் திரும்ப கிடைத்திருப்பது உண்மையில் பெரிய விஷயம்தான். ஆனால் இந்த பைக் தொலைந்து போனதில், அதன் உரிமையாளர் மீதும் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. ஆம், சாவியை அவர் பைக்கில் இருந்து எடுக்காமல் விட்டு விட்டதுதான், இந்த திருட்டு சம்பவத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவி பைக்கிலேயே இருக்கும்போது, கொள்ளையர்ளின் பணி மிகவும் எளிதாகி விடும். நல்ல வேளையாக பைக் கிடைத்து விட்டாலும், குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. எனவே அவர்கள் எதற்காக பைக்கை திருடினார்கள்? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த திருட்டு சம்பவத்தில் கை தேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக சாவி இருக்கிறது என்பதால், கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு யாரேனும் பைக்கை திருடியிருக்கலாம் என தெரிகிறது. கடந்த காலங்களில் ஜாலியாக ஓட்டி பார்ப்பதற்காக பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை இளைஞர்கள் சிலர் திருடிய வரலாறுகள் உண்டு. எரிபொருள் தீர்ந்தவுடன் பைக்கை அப்படியே விட்டு விட்டு அவர்கள் சென்று விடுவார்கள்.

மறுபக்கம் கை தேர்ந்த கொள்ளையர்கள் முழுக்க முழுக்க பணத்திற்காக மட்டுமே பைக்குகளை திருடுகிறார்கள். அவர்கள் பைக்கை திருடி குறைந்த விலைக்கு விற்று விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அல்லது பைக்கின் பாகங்களை பிரித்து கள்ள சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

எனவே இந்த வழக்கில் கை தேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது போல் தெரிகிறது. அவர்களிடம் சிக்கியிருந்தால், பைக் திரும்ப கிடைத்திருப்பது சந்தேகம்தான். எனினும் சிசிடிவி கேமராவில் கொள்ளையர்கள் சிக்கியிருப்பதாகவும், காவல் துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

காவல் துறையில் அவர்கள் பிடிபடும்போது, என்ன நோக்கத்திற்காக பைக்கை திருடினார்கள்? என்ற தகவல் நமக்கு தெரியவரும். இதற்கிடையே தனது பைக்கை உடனடியாக கண்டுபிடித்து தந்ததற்காக, மும்பை காவல் துறையினருக்கு, கேடிஎம் பைக்கின் உரிமையாளர் நன்றி தெரிவித்துள்ளார். பைக்கை கண்டுபிடிப்பதற்காக காவல் துறையினரும் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கலாம்.

இந்த விஷயத்தில் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடமும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சாவியை பைக்கிலேயே விட்டு செல்லும் பழக்கம் இருக்கலாம். இந்த அலட்சியத்தை உடனடியாக மாற்றி கொள்ள வேண்டும். இந்த கேடிஎம் பைக்கின் உரிமையாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் கிடைக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Image Courtesy: Sujay Shivam Warrier


Click it and Unblock the Notifications








