ஆம்புலன்சுக்காக நிறுத்தப்பட்ட சண்டை! அந்த பக்கம் போனதும் நடந்ததுதான் ட்விஸ்ட்! சிரிப்பு மூட்டிய ஆண்ட பரம்பரை!
இந்திய சாலைகளில் சில சமயங்களில் ஆம்புலன்ஸ்கள் (Ambulance) படாதபாடு பட்டு விடுகின்றன. சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்களில், போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்வதை அவ்வப்போது கண்டு வருகிறோம். இது போதாதென்று ஒரு சில வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவது கிடையாது. கேரளா (Kerala) மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதற்கு உதாரணம். அங்கு மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) காரின் டிரைவர் ஒருவர் சமீபத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்றார்.
இந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவிய நிலையில், அந்த காரின் உரிமையாளருக்கு 2.50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அவரின் டிரைவிங் லைசென்சும் (Driving License) அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

ஆனால் அதே கேரளாவில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடவே அனைவரது முகத்திலும் சிரிப்பையும் வரவழைத்துள்ளது. நாம் தற்போது பேசி கொண்டுள்ள சம்பவம், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று அந்த பகுதியில் 2 கட்சியினருக்கு இடையே தெருச்சண்டை ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. 2 குழுவினர் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டிருந்த காரணத்தால், ஆம்புலன்ஸால் முன்னேறி செல்ல முடியவில்லை. ஆனால் ஆம்புலன்ஸை பார்த்ததும், அங்கிருந்த அனைவரும் சண்டையை உடனடியாக நிறுத்தினர். அத்துடன் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதன் காரணமாக ஆம்புலன்ஸ் உடனடியாக அந்த இடத்தை கடந்து சென்றது. சரி, ஆம்புலன்ஸ் வந்த காரணத்தால், சண்டை முடிவடைந்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுதான் கிடையாது. ஆம்புலன்ஸ் அந்த இடத்தை கடந்து சென்ற உடனே, அங்கிருந்தவர்கள் மீண்டும் சண்டையை தொடங்கி விட்டனர்.
ஆம்புலன்ஸ் செல்லும் வரை மட்டும் தற்காலிகமாக தங்கள் சண்டையை அவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சண்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இரண்டும் கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கட்சிகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களை சாலையில் பார்த்தால், உடனடியாக வழி விட வேண்டும். ஏனெனில் அந்த வாகனங்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியமானது. ஒரு வினாடி தாமதம் கூட, ஒருவரின் வாழ்க்கையில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
எனவே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களை சாலையில் கண்டால், உடனடியாக ஓரமாக ஒதுங்கி வழி விடுங்கள். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து சென்ற பிறகு, உங்கள் பயணத்தை தொடருங்கள். இதற்கு இணங்க மறுத்தால், கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
தற்போதெல்லாம் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் முன் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதில், வழி விட மறுக்கும் வாகனங்கள் எளிதாக பதிவாகி விடும். அதன் அடிப்படையில் கடும் நடவடிக்கை பாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மனித நேயத்துடனும், முன்னெச்சரிக்கை உடனும் நடந்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








