கழிவு பொருட்கள் மூலம் மாணவர்கள் தயாரித்த மின்சார கார்! ஒரு முறை சார்ஜ் செய்தால் 220 கிமீ பயணிக்கும்
முழுக்க முழுக்க கழிவு பொருட்களை கொண்டு, எலெக்ட்ரிக் கார் ஒன்றை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுக்க எலெக்ட்ரிக் கார்கள் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது என்பதுடன், பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது அவற்றை இயக்குவதற்கான செலவும் மிக குறைவுதான். எனவே மக்கள் ஆர்வமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர்.

அதே சமயம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதாலும், காற்றின் தரத்தை பாதுகாக்க முடியும் என்பதாலும், உலக நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. அரசுகள் கொடுக்கும் ஆதரவு காரணமாகவும், மக்கள் காட்டும் ஆர்வம் காரணமாகவும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இப்படிப்பட்ட சூழலில், முன்னணி கார் நிறுவனங்களுக்கே சவால் அளிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை முழுக்க முழுக்க மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ளனர் என்பது அதன் முதல் சிறப்பு. பயன்படாது என ஒதுக்கப்பட்ட கழிவு பொருட்களை கொண்டு முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் இரண்டாவது சிறப்பு.

நெதர்லாந்தை சேர்ந்த 22 மாணவர்கள் அடங்கிய குழு இந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரை டிசைன் செய்யவும், கட்டமைக்கவும் சுமார் 18 மாதங்கள் ஆகியுள்ளது. தொலைக்காட்சிகள், விளையாட்டு பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் காணப்படும் கடினமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி இந்த எலெக்ட்ரிக் காரின் பாடியை கட்டமைத்துள்ளனர்.

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் இருக்கைகள், தேங்காய் நார்கள் மற்றும் குதிரை முடிகளை உள்ளடக்கியுள்ளன. இது இரண்டு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். பிரகாசமான மஞ்சள் நிறத்தில் மாணவர்கள் இந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளனர். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கு அவர்கள் 'லூகா' என பெயரிட்டுள்ளனர்.

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் (56 மைல்கள்) வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது. அதே சமயம் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 220 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும். எய்ண்ட்ஹோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த தகவல்களை தற்போது தெரிவித்துள்ளது.

பயன்படாது என ஒதுக்கப்படும் கழிவு பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுவதற்காக இந்த எலெக்ட்ரிக் காரை மாணவர்கள் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார் நிறுவனங்கள் இனி கழிவு பொருட்களை பயன்படுத்த தொடங்கும் என உறுதியாக நம்புவதாக இந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு குழுவில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த காரின் மற்றொரு சிறப்பம்சமாக அதன் ரேஞ்ச் பார்க்கப்படுகிறது. பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 220 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என்பது உண்மையிலேயே சிறப்பான ரேஞ்ச் ஆகும். பேட்டரி தீர்ந்து விடும் என்ற அச்சம் இல்லாமல், தினசரி நகர பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இந்த ரேஞ்ச் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications