உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...
உயிர் காக்கும் உன்னத தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்து, உலகின் கவனத்தை சென்னை மாணவர்கள் ஈர்த்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. வாய்க்காலில் கார் பாய்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வுதான் அது.

பழனி முருகன் கோயிலுக்கு அவர்கள் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது, இந்த துயர சம்பவம் நடைபெற்றது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வாய்க்காலில் பாய்ந்தது. ஆனால் காரின் கதவுகளை திறந்து அவர்களால் வெளியேற முடியவில்லை.

தற்போது இதுபோன்ற பிரச்னைகளுக்கு சென்னை எஸ்எஸ்என் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். கார் ஒருவேளை நீரில் மூழ்க தொடங்கினால், அதன் மேற்கூரை (Roof) தானாக திறந்து கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

நீரில் மூழ்கும் கார்களில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பிக்க இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு உதவி செய்யும். விஷால் மற்றும் நெயில் அஸ்வின் ராஜ் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து, உயிர் காக்கும் இந்த உன்னத தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

பிரான்ஸை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான வாலியோ, சர்வதேச அளவில் மாணவர்களுக்கு இடையே, ''வாலியோ இன்னோவேஷன் சேலஞ்ச்'' (Valeo Innovation Challenge) என்ற போட்டியை நடத்துகிறது.

இதற்கு இந்தியாவில் இருந்து வெறும் 2 ப்ராஜெக்ட்கள் மட்டுமே தேர்வாகியுள்ளன. இதில், சென்னை கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது.

சென்சார், மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் மேற்கூரையை திறக்கும் மெக்கானிசம் ஆகியவைதான் அவை. இதன்படி தண்ணீரின் அழுத்தத்தை கண்டறியும் 6 சென்சார்கள் காரில் பொருத்தப்படும். இதில், 4 சென்சார்கள் மூலையிலும், 2 சென்சார்கள் பக்கவாட்டிலும் பயன்படுத்தப்படும்.

எனவே கார் தண்ணீரில் மூழ்க தொடங்கினால், மைக்ரோ கண்ட்ரோலருக்கு இந்த சென்சார்கள் சிக்னலை தூண்டிவிடும். இதன் மூலமாக காரின் மேற்கூரை தானாகவே திறந்து கொள்ளும். எனவே உள்ளே இருப்பவர்கள் எளிதாக வெளியேறி விடலாம்.

மாருதி சுஸுகி 800 காரில் இந்த தொழில்நுட்பம் சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை புதிய மாடல் கார்களில் பயன்படுத்த முடியும். அதே சமயம் தற்போது உள்ள கார்களிலும் கூட இந்த தொழில்நுட்பத்தை இன்ஸ்டால் செய்யலாம்.

தற்போது உள்ள கார்களில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்த 15 ஆயிரம் மட்டுமே செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு சில மாடிபிகேஷன்களை செய்ய வேண்டும். ஆனால் இந்த மாடிபிகேஷன்கள் காரணமான காரின் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அதேபோல் ஏரோடைனமிக்ஸிலும் எவ்வித பாதிப்பும் உண்டாகாது. இந்த சென்சார்கள் மிகவும் வலுவானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கார் தண்ணீரில் தலைகீழாக கவிழ்ந்தாலும் கூட சென்சார்களுக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








