நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி மாணவர்கள் சாதனை!
சென்னை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் பைக் ஒன்றை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். அது குறித்த தகவல்களை காணலாம்.
சென்னையில் கடந்த 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் உந்தப்பட்டு, நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் வகையில் புதிய பைக் ஒன்றினை மிகவும் மலிவான விலையில் தயாரித்து அசத்தியுள்ளனர் பொறியியல் மாணவர்கள் சிலர். இது குறித்து விரிவாக காணலாம்.

நாம் அன்றாடம் பயணிக்கும் பைக்குகளை நிலத்தில் மட்டுமே ஓட்ட முடியும், அவற்றை நீரில் ஓட்டினால், இஞ்சினில் நீர் புகுந்து பழுதடைந்துவிடும். நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் பைக்குகள் வெளிநாடுகளில் பல லட்சங்கள் விலையில் கிடைக்கிறது. தற்போது இந்த வகை பைக் ஒன்றை 20,000 ரூபாய் முதலீட்டில் தயாரித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் வியக்கவைத்துள்ளனர்.

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் அருகேயுள்ள சிரயின்கீழு என்ற ஊரில் உள்ள முசாலியர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பிரிவில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களான விபின், ரோனி ராஜன், அனந்தன், உன்னிகிருஷ்னன், அனு சரசன் மற்றும் நஃபுல் ஹுசைன் ஆகியோர் இந்த நீர் நில பைக்கை உருவாக்கியுள்ளனர்.

தங்களின் பொறியியல் படிப்பின் ப்ராஜெக்ட்டுக்காக இந்த பைக்கை தயாரித்துள்ளனர் இம்மாணவர்கள். இந்த பைக்கை சாதரணமாக நிலத்தில் ஓட்டலாம், சில விஷேச பாகங்களை இணைத்து நீரிலும் ஓட்டலாம். ஒரே பைக் மூலம் நீரிலும் நிலத்திலும் பயணம் செய்யலாம் என்பது விஷேசமாகும்.

நீரில் பயணம் செய்யும் வகையில் உள்ள விஷேச பாகம் பைக்கின் அடியில் பொருத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு படகை போல இந்த அமைப்பு காட்சியளிக்கிறது. நிலத்தில் திசைக்கு ஏற்றார் போல் திருப்பிக்கொள்வது போல் நீரிலும் இதன் ஹேண்டில்பாரை உபயோகித்து திசை மாற்றி பயணிக்கலாம்.

சில விஷேச அமைப்புகள் மூலம் பைக்கின் இஞ்சின் ஆற்றலை நீரில் உந்துசக்தியாக மாற்றியுள்ளனர். மேலும் இதன் மிதக்கும் பாகங்கள் அனைத்தும் பிவிசி பைப் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதால், பைக்கின் விலை இவ்வளவு மலிவாக உள்ளதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் பைக்குகள் வெளிநாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் அதன் விலை சில லட்சங்களாகும். ஆனால் மாணவர்கள் இந்த பைக்கை 20,000 ரூபாய் முதலீட்டில் தயாரித்து வியக்க வைத்துள்ளனர்.

படகில் உள்ள மோட்டார்களின் விலை சில லட்ச ரூபாய் மதிப்பிலானவை. அதனை உபயோகிப்பது பைக்கின் விலையை உயர்த்திவிடும் என்பதால் சாதரண பைக் இஞ்சின் மூலமே நீரிலும் பயணிக்கும் வகையில் சில விஷேச பாகங்களை மட்டும் தயாரித்து உருமாற்றியுள்ளனர் இவர்கள்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் தான் மாணவர்களுக்கு இந்த பைக் தயாரிக்கும் எண்ணத்தை கொடுத்துள்ளது.

சென்னை வெள்ளத்தின் போது ஒருவர் தனது பைக்கை இடுப்பளவு தண்ணீரில் ஓட்டிச்செல்வதை தொலைக்காட்சிகளில் பார்த்தது தான், நீர்-நில பைக் தயாரிக் காரணமாக அமைந்ததாக கூறுகிறார்கள் மாணவர்கள்.

தொழில்முறையில் இந்த பைக்கை தயாரித்து வெளியிட்டால் சென்னையில் மட்டும் அல்ல, நாட்டின் எந்த நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டாலும் இந்த பைக்கில் எளிதாக பயணிக்கலாம் என்று யோசனை கூறுகிறார்கள் இவர்கள்.

20,000 ரூபாயில் மாணவர்கள் தயாரித்துள்ள இந்த பைக் தொழில்முறையில் தயாரிக்கப்பட்டால் நிச்சயம் அது வரவேற்பை பெறும் என்பது சென்னை மக்களுக்கு மட்டுமே புரியும் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








