கடத்தல்காரர்களை பிடிக்க காரின் முன் பகுதியில் தொங்கியபடி சென்ற எஸ்ஐ... உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
கடத்தல்காரர்களை பிடிப்பதற்காக காரின் முன் பகுதியில் தொங்கியபடி சென்ற உதவி ஆய்வாளரின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் வாகன ஸ்டண்ட் காட்சிகளை அதிகமாக பார்க்க முடியும். சமீப காலமாக இந்திய திரைப்படங்களிலும் வாகன ஸ்டண்ட் காட்சிகள் அதிகம் இடம்பெற்று வருகின்றன. வில்லன்களை பிடிப்பதற்காக வாகனத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தொங்கி கொண்டு ஹீரோ ஆபத்தான முறையில் பயணிப்பது போன்ற காட்சிகளை இந்திய திரைப்படங்களில் அதிகம் காண முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. காரில் மது கடத்தியவர்களை பிடிப்பதற்காக, காரின் பானெட் மீது தொங்கியபடி, காவல் துறை அதிகாரி ஒருவர் 2 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். மது கடத்தியவர்களை பிடிப்பதற்காக அவர் தனது உயிரையே பணயம் வைத்துள்ளார் என்றால் மிகையல்ல.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெண்டுலா நகரில் இச்சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 28ம் தேதி) நடைபெற்றுள்ளது. மர்ம நபர்கள் சிலர் காரில் மது பாட்டில்களை கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக கார் ஒன்று அதிவேகமாக வந்தது. காவல் துறை அதிகாரிகளை பார்த்ததும் காரின் ஓட்டுனர் உடனடியாக வேகத்தை குறைத்தார். ஆனால் அதன்பின்பு திடீரென வேகமாக காரை ஓட்டி வந்த அவர், உதவி ஆய்வாளர் கோபிநாத்தை கொலை செய்யும் நோக்கில், அவர் மீது காரை ஏற்றினார். இதன் காரணமாக நிலை தடுமாறிய உதவி ஆய்வாளர் கோபிநாத் காரின் பானெட் மீது விழுந்தார்.

ஆனால் காரின் ஓட்டுனர் வேகத்தை குறைக்கவில்லை. அதே சமயம் காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத்தும் விடாப்பிடியாக காரின் பானெட்டை பிடித்து தொங்கி கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் கீழே விழுவது போல் சென்ற உதவி ஆய்வாளர் கோபிநாத், எப்படியோ கார் மேற்கூரையின் இரண்டு பக்கத்தையும் கெட்டியாக பிடித்து விட்டார்.

இதன் மூலம் இரு கால்களும் விண்டுஸ்க்ரீன் மீது தொங்கி கொண்டிருக்க, காரின் மேற்கூரை மீது படுத்தபடி உதவிய ஆய்வாளர் கோபிநாத் பயணித்தார். ஒரு கட்டத்தில் காரின் முன்பக்க விண்டுஷீல்டு உடைந்தது. எனவே அதன் வழியாக காருக்கு உள்ளே செல்ல உதவி ஆய்வாளர் கோபிநாத் முயற்சி செய்தார். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நபர், அவரை தள்ளி விட முயன்றார்.

இப்படியே சுமார் 2 கிலோ மீட்டர்கள் சென்ற நிலையில், காவல் துறை வாகனம் தங்களை துரத்தி கொண்டு வருவதை காரின் டிரைவர் பார்த்தார். எனவே காருக்குள் இருந்தவர்கள் காரை அப்படியே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் கோபிநாத்திற்கு வயிறு, கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதை வைத்து பார்க்கும்போது மது பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது செடான் ரக கார் என்பது தெரியவருகிறது. பார்ப்பதற்கு மாருதி சுஸுகி சியாஸ் கார் போல் உள்ளது. அந்த காரில் இருந்து சுமார் 80 மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தப்பி சென்ற நபர்களை பிடிக்கும் பணிகளை காவல் துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து அவர்களை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் கோபிநாத்திற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக உயர் அதிகாரிகள் பலர் உதவி ஆய்வாளர் கோபிநாத்தின் செயலை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications