நடுரோட்டில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய துணை ஆணையர்: வைரல் வீடியோ...!
ஹெல்மெட் அணியாமல் ஜாலியாக பைக்கை ஓட்டி வந்த துணை ஆய்வாளரை, துணை காவல் ஆணையர் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இந்தியாவில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குவது குற்றமாகும். இருசக்கர வாகன விபத்தில், பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு, ஹெல்மெட் அணியாமல் இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, இருசக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை. ஆகையால், இதுபோன்ற வாகன ஓட்டிகளின், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாமே...? என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.

இதனடிப்படையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோன்று, ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீஸார்கள் மீதும் இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, போலீஸார் யாரேனும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தால், அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் பைக்கை இயக்கியதாக ராதாகிருஷ்ணன் என்ற போலீஸாருடைய வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, வாட்ஸ் ஆப்பில் அதிகளவில் வைரலானதை அடுத்து, ராதா கிருஷ்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த, வீடியோவை பிஹைண்ட் உட்ஸ் ஏர் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோவும் காட்டு தீயாய் வைரலாகி வருகின்றது.
வீடியோவில், சீருடை அணிந்த போலீஸார் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு, பைக்கை இயக்கி வந்த துணை ஆய்வாளரை, உதவி காவல் ஆணையர் மடக்கி, நடு ரோட்டில் வைத்தே சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

ஆனால், இவர் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அண்மையில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர், அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த விதி, தற்போது பைக்கை மடக்கிய துணை காவல் ஆணையருக்கும் பொருந்தும். ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், இதனை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அதில், சிலர் தாங்கள்தான் அரசாங்கம் என்பது போன்ற உணர்வில் இருக்கின்றனர். இவ்வாறு, செயல்படும் அதிகாரிகளின் செயலை தவிர்க்கும் விதமாக தற்போதைய இந்த நடவடிக்கை உள்ளது.

அதேசமயம், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கி போலீஸார் சிக்குவது இது முதல்முறையல்ல. முன்னதாக, இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆகையால், பொதுமக்களுக்கு முன்னோடியாக, அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், முதலில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இந்த புதிய உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








