டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா?
மானியம் பெற தகுதியுடைய வாகனங்களின் பட்டியலில் இருந்து டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை டெல்லி அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்கிறது. ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு வழங்கி வந்த மானியத்தை டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானியம் பெற தகுதியுடைய வாகனங்களின் பட்டியலில் இருந்து நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை டெல்லி மாநில அரசு நீக்கியுள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது. ஆனால் இந்த ரேஞ்ச் கிடைக்கவில்லை என பலர் தொடர்ச்சியாக புகார் செய்தனர்.

இந்த புகாரின் பேரில்தான் டெல்லி மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உறுதி செய்துள்ளார். டாடா நிறுவனம் கூறிய ரேஞ்ச் கிடைக்கவில்லை என நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

டெல்லி மாநில போக்குவரத்து துறை தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தற்போது மானியம் பெற தகுதியுடைய வாகனங்களின் பட்டியலில் இருந்து நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு அம்மாநில அரசு மானியமும் கொடுத்து கொண்டுள்ளது. எனவே நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வாங்க வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வம் காட்டினர்.

ஆனால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இனி டெல்லி அரசு மானியம் வழங்காது. எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வாங்குவதாக இருந்தால் முழு தொகையையும் வாடிக்கையாளர்களே செலுத்த வேண்டும். இதன் காரணமாகதான் டெல்லியில் விற்பனை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அராய் அமைப்பு வாகனங்களை சோதனை செய்து அவற்றின் மைலேஜ்/ரேஞ்ச் ஆகியவற்றுக்கு சான்றளித்து வருகிறது. ஆனால் அராய் அமைப்பு தெரிவிக்கும் மைலேஜ் நடைமுறையில் கிடைக்காது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகதான் இருக்கும். ஏசி பயன்பாடு, ஓட்டுபவரின் டிரைவிங் ஸ்டைல் ஆகியவற்றை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம்.

இந்த வகையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்ச் குறைவாக கிடைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு தற்போது நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வந்தபின், இது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு போட்டியாக மாறும்.


Click it and Unblock the Notifications








