டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சொகுசு கார்களுடன் செம வாழ்க்கை... எப்படி தெரியுமா?
வக்கீல் அலுவலகத்தில் டீ பாயாக வேலை செய்து விட்டு, பெரும் செல்வந்தராக உயர்ந்த ஒருவரின் ஆச்சரிய கதையைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

கனவுகளுக்கு எல்லை என்பதே கிடையாது. ஆனால் இந்த உலகில் ஒரு சிலரால் மட்டுமே கடின உழைப்பின் மூலமாக தங்கள் கனவை நிறைவேற்றி கொள்ள முடிகிறது. இந்த வகையில் கடின உழைப்பின் மூலமாக சாதனை படைத்த சதீஷ் என்பவரின் வாழ்க்கையை பற்றிதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

48 வயதாகும் சதீசுக்கு ரியல் எஸ்டெட் டெவலப்பர், தொழிலதிபர் என பல முகங்கள் உள்ளன. ஒரு வக்கீலின் அலுவலகத்தில், டீ மற்றும் காபி சப்ளை செய்யும் வேலையை செய்து கொண்டிருந்த சதீஷ், பின்னாளில் லம்போர்கினி டீலர்ஷிப்பின் உரிமையாளராக உருவெடுத்தவர் என்பது கூடுதல் சிறப்பு. அவரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த செய்தி உங்களுக்கு நிச்சயமாக உத்வேகம் கொடுக்கும்.

நாம் இங்கே பேசி கொண்டிருக்கும் சதீஷ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 13 வயதாக இருந்தபோது அவர் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார். மல்லேஸ்வரம் பகுதியில், ஒரு 10க்கு 10 அறையில், தனது மூத்த சகோதரி மற்றும் அவரது கணவருடன் சதீஷ் வசித்து வந்தார். எனினும் ஆங்கில மீடியம் பள்ளியில் அவர் தனது கல்வியை தொடர்ந்தார்.

16 வயதாக இருந்தபோது ஒரு வக்கீலின் அலுவலகத்தில் சதீஷ் வேலைக்கு சேர்ந்தார். அங்கு டீ, காபி சப்ளை செய்யும் வேலையை அவர் அப்போது செய்து கொண்டிருந்தார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து படித்து கொண்டேதான் இருந்தார். வணிகவியலில் பட்டம் பெற தயானந்த் சாகர் மாலை நேர கல்லூரியில் அவர் படித்தார்.

இதற்கிடையே கடந்த 1987ம் ஆண்டு டைட்டன் வாட்ச் நிறுவனத்தில் டைப்பிஸ்ட் பணியில் அவர் வேலைக்கு சேர்ந்தார். மூன்று வருடங்களுக்கு பின் எச்பி (HP) நிறுவனத்தின் பர்சேஸிங் டிபார்ட்மெண்ட்டில் அவருக்கு டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. எச்பி நிறுவனத்தில் அவருடைய மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு மாதத்திற்கு வெறும் 1,200 ரூபாய் மட்டுமே.

எனினும் எச்பி நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளில் சதீஷ் பணியாற்றினார். ஸ்டோர்ஸ், எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி அவர் அனுபவம் பெற்றார். இதன் மூலம் அந்த நிறுவனத்தின் அவரது ரேங்க் உயர்ந்தது. இறுதியாக கடந்த 1999ம் ஆண்டு லாஜிஸ்டிக்ஸ் மேனேஜராக இருந்தபோது அவர் அந்த வேலையில் இருந்து விலகினார்.

பத்து ஆண்டுகளில் 9 பதவி உயர்வுகளை பெற்றதாக பெங்களூர் மிரரிடம் சதீஷ் கூறியுள்ளார். இது அவரது கடின உழைப்பு மற்றும் உறுதி தன்மையை காட்டுகிறது. 1999ம் ஆண்டுக்கு பிறகு அவர் ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்தார். எனினும் மந்தநிலை உள்ளிட்ட ஒரு சில காரணங்களால், சதீஷின் சூழ்நிலை மோசமாக இருந்தது.

ஆனால் சதீஷின் நண்பர்கள் மற்றும் எச்பி நிறுவனத்தில் அவருடன் பணியாற்றியவர்கள் வங்கி லோன் மூலம் சதீஷிடம் இருந்து அப்பார்ட்மெண்ட்களை வாங்கி அவரது தொழிலுக்கு உதவி செய்தனர். முதல் 5 ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்ததாக சதீஷ் கூறுகிறார். எனினும் 2008-2009ம் ஆண்டில் சதீசுக்கு திருப்புமுனை ஏற்பட்டது.

அப்போது பெங்களூர் மற்றும் கேரளாவில், அவர் பல்வேறு குடியிருப்புகளை கட்ட தொடங்கியிருந்தார். பின் தனித்துவமான வாகனம் ஒன்றை வாங்க வேண்டும் என சதீஷ் விரும்பினார். முதலில் போர்ஷே வாங்கலாம் என்றுதான் சதீஷ் திட்டமிட்டார். ஆனால் பெங்களூரில் அவை நிறைய இருப்பதை பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.

இதன்பின் நிறைய ரிசர்ச்களை செய்த பிறகு முதலில் லம்போர்கினி டீலர்ஷிப்பை பெங்களூரில் திறக்கலாம் என சதீஷ் முடிவெடுத்தார். இதற்கு பிறகு தனக்காக ஒரு லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் (Lamborghini Aventador Roadster) காரை சதீஷ் வாங்கினார். இந்தியாவில் இன்றளவும் கூட லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் அரிதான ஒரு வாகனம்தான்.
சதீஷின் குடும்ப கராஜில் லம்போர்கினி தவிர, 5 வித்தியாசமான பிஎம்டபிள்யூ கார்கள், 2 ஆடி கார்கள் மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்கள் உள்ளன. தற்போது அந்த பகுதியில் செல்வ செழிப்பு மிக்க நபர்களில் ஒருவராக சதீஷ் திகழ்கிறார். இளம் தொழில்முனைவோர் எப்போதும் பெரிதாக கனவு காண வேண்டும் என சதீஷ் கூறுகிறார்.
Source:Mr RK Kannadiga/YouTube
மேலும் தங்கள் இலக்கை அடைய வேண்டுமென்றால் உறுதியாகவும், கவனத்துடனும் போராட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார். கடின உழைப்பு முன்னேற்றம் தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பலர் இருக்கின்றனர். அவர்களில் சதீசும் ஒருவர்.


Click it and Unblock the Notifications








