ஜெயில்ல இந்த அளவுக்கு சம்பளம் கொடுப்பாங்களா என்ன? கம்பி எண்ணிட்டு இருக்கும்போதே ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினாரா!
சுகேஷ் சந்திரசேகர், இந்த பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மாபெரும் பண மோசடியை நிகழ்த்தியவரே இவர் ஆவார். தொழிலதிபர்களிடம் இருந்து ரூ. 200 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததன் காரணத்திற்காக அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இப்போது அவர் டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே இணையத்தை அனல் பறக்கச் செய்யும் வகையில் இவர் சார்ந்த ஓர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே (Rolls Royce Spectre) காரை வாங்கி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. சுவாரஷ்யமாக இந்த தகவல் சுகேஷ் சந்திரசேகரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலேயே பதிவிடப்பட்டு இருக்கின்றது. இது பலரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, ஜெயில்ல இவ்ளோ சம்பளம் தாராங்களா என்றும் பலரைக் கேட்கச் செய்யும் வகையில் இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக, அவர் பதிவில் இருந்த வாக்கியம் பலரையும் அசந்து போகச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. பதிவில் அவர் கூறியிருந்ததாவது, "சமீபத்தில் ஒருவர் என்னிடம் சொன்னார், பணத்தால் மகிழ்ச்சியையோ, சுதந்திரத்தையோ வாங்க முடியாது.
ஆனா, இங்க பாருங்க, இப்படி சொன்னவர் எங்கு ஷாப்பிங் செய்கிறார் என்று தெரியவில்லை. நன்றிகள் ரோல்ஸ் ராய்ஸ் இந்த ஸ்மூத்தான மற்றும் சிறப்பு டெலிவரிக்கு" என தெரிவித்திருக்கின்றார். இத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரின் படத்தையும் அவர் பகிர்ந்திருக்கின்றார். இதை வைத்தே பலரும் அவர் இந்த காரை ஜெயிலுக்கு இருந்தபடியே வாங்கிவிட்டதாக நம்பக் காரணமாக அமைந்திருக்கின்றது.
ஆனால், ஜெயிலுக்குள் இருந்தபடி எப்படி ஒருவரால் வாகனத்தை வாங்க முடியும் என்பதே இங்கே பலரின் சந்தேகமாக மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே சுகேஷ் சந்திரேசகரின் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கம் பல அவரின் வேலையாட்களால் கையாளப்படுகின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, இந்த பதிவில் வெளியிடப்பட்டு இருக்கும் படமும் நிஜ ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரேவுடையது அல்ல என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.
ஆன்-லைனில் உருவாக்கப்பட்டதைப் போல அந்த படம் இருக்கின்றது. எனவே இந்த காரை மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் நிஜமாகவே வாங்கியுள்ளார் என்று கூறிவிட முடியாது. அதேநேரத்தில், இவர் சுதந்திர பறவையாக பணக்காரர்களை ஏமாற்றிக் கொண்டு திரியும்போது 25க்கும் அதிகமான ஆடம்பர கார்களை வைத்திருந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதில் பல வாகனங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே சுகேஷ்-க்கு இந்த ஆடம்பர கார் மீதும் ஆசை வந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. மிகுந்த மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களை மிக அதிகளவில் தாங்கி இருக்கும் ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே ஆகும்.
இதன் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 7.50 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இந்த காரை இந்தியாவில் ஒரு சில பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார காரில் ஓர் முழு சார்ஜில் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதற்காக 102 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், அதிக பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 593 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் இ-மோட்டாரே ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரேவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு சில பேரிடத்தில் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டில் இருக்கின்றது. சென்னையிலும் சில முன்னணி தொழிலதிபர்கள் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காரையே ஜெயிலில் இருந்து சுகேஷ் வாங்கியிருப்பதாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது ஓர் நம்பகமற்ற தகவல் ஆகும்.


Click it and Unblock the Notifications








