சென்னையில் தறிகெட்டு ஓடிய பிஎம்டபிள்யூ கார்! 3 பேரை அடித்து தூக்கியது இந்த பெரும் புள்ளியா?
சென்னையில் பிஎம்டபிள்யூ காரை அதிவேகமாக ஓட்டி மூன்று பேரை அடித்து தூக்கிய சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகன் யோகேஸ் ஸ்ரீ ரத்தினம் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்திற்கு காரணம் அவர் தனது நண்பர்களுடன் பொதுசாலையில் கார் ரேஸில் ஈடுபட்டது தான் என தெரிய வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் யோகேஷ் ஸ்ரீ ரத்தினம். 27 வயதான இவர் சொந்தமாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் அவ்வப்போது சென்னையில் பல இடங்களில் கார்களில் ரைடு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரும் இவரது நண்பர்களும் இரண்டு மூன்று கார்களில் சென்னையில் பல பகுதிகளில் வலம் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

நேற்று இரவு இவரும், இவரது நண்பர்களும் சென்னை அண்ணா சாலையில் வேகமாக காரில் வந்துள்ளனர். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு யார் முன்னே செல்கிறார் என ஆபத்தை உணராமல் அதிவேகமாக சாலையில் பயணித்துள்ளனர். அப்பொழுது யோகேஸ் ஸ்ரீ ரத்தினம் தனது பிஎம்டபிள்யூ காரில் மிக வேகமாக தனது நண்பர்களை முந்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
இவர் சென்னை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது. காரின் கட்டுப்பாட்டை இழந்தார் இதனால் கார் தறி கேட்டு ஓடியது. இதில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மூவர் மீது கார் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் கார் தறி கேட்டு ஓடியதில் அப்பகுதியில் இருந்த மின்கம்பம் மீது கார் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பிரபு, ஜாபர்கான் பேட்டை சேர்ந்த கார்த்திக் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காரில் பயணித்த யோகேஷ் ஸ்ரீ ரத்தினத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த விபத்து குறித்து சென்னை பாண்டி பஜார் போலீசார் யோகேஸ் ஸ்ரீ ரத்தினம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய பிஎம்டபிள்யூ கார் அதிகமான சேதத்தை சந்தித்தது இதன் முன் பகுதி பெரும்பாலான இடங்கள் உடைந்து போயிருந்தன கார் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலைக்கு மாறியது.

இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் இருந்து விபத்தில் சிக்கிய பிஎம்டபிள்யூ கார் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. தற்போது விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கு காரணம் நண்பர்களுடன் யோகேஷ் ஸ்ரீ ரத்தினம் கார் ரேஸ் ஓட்டியது தான் என அங்கிருந்தவர்கள் கூறி வருகின்றனர்.
காரில் நண்பர்களுடன் பயணிப்பது என்பது ஒரு நல்ல அனுபவத்தை தரும் தான். ஆனால் பொது சாலைகளில் ஒருவருக்கொருவர் முந்து மனப்பான்மையில் ரேஸ் ஓட்டுவது என்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். இது சாலையில் உங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் சென்னையில் இப்படியான ரேஸ்கள் அதிகம் நடக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பைக் ரேஸ் மட்டுமே அதிகமாக நடந்து வந்த நிலையில், தற்போது பல பணக்காரர்கள் தங்கள் கார்களில் ரேஸ் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இசிஆர் போன்ற சாலைகளில் இதுபோன்ற ரேஸ்கள் அடிக்கடி சட்டவிரோதமாக நடப்பது அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனம் ஓட்டும் போது எப்பொழுதும் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். அதே நேரம் ஒருவருக்கொருவர் போட்டி இல்லாமல் சாலையில் சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். இப்படியாக வாகனம் ஓட்டினால் விபத்து பெரும்பாலும் தவிர்க்கப்படும். கவனக்குறைவுடனும் ஒருவரை ஒருவர் முந்து மனப்பான்மையிலும் வாகனம் ஓட்டுவது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications









