வாகன உற்பத்தியாளர்களுக்கு சோகம்.. வாடிக்கையாளர்களுக்கு அடித்தது யோகம்..
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பாரத் ஸ்டேஜ் 3 தர வாகனங்களின் விற்னைக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம் . அது குறித்த தகவல்களை காணலாம்.
நாடு முழுவதும் பாரத் ஸ்டேஜ்-3 தர இஞ்சின்கள் கொண்ட வாகனங்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 8 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ள சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி என்ற யோகம் அடித்துள்ளது.

இந்தியாவில் வாகனப் புகை மாசுபாடு, பாரத் ஸ்டேஜ் ( பிஎஸ் ) என்ற அளவீடு மூலம் அளவிடப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு தடுப்பை கருத்தில் கொண்டு மாசு கட்டுப்பாட்டு ஆணையமானது ஏற்கெனவே அமலில் இருக்கும் பிஎஸ்-3 விதிக்கு பதிலாக பாரத் ஸ்டேஜ்-4 விதிகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் முழுமையாக பிஎஸ் 4 விதிகள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதாவது, பிஎஸ் 4 தர அளவிலான இன்ஜின் பொருத்திய வாகனங்களை மட்டுமே விற்கவோ பதிவு செய்யவோ முடியும்.

கெடு முடிய சில நாட்களே உள்ள நிலையில், தற்போது கையிருப்பில் உள்ள பிஎஸ்3 வாகனங்களை ஏப்ரல்1ஆம் தேதிக்கு பிறகும் விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆட்டொமொபைல் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கையிருப்பில் உள்ள பிஎஸ்3 வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அறிக்கை கேட்டது. கார்கள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என கிட்டத்தட்ட 8.24 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்துவந்த உச்சநீதிமன்றம் தற்போது இறுதி தீர்ப்பை அளித்துள்ளது. இதில், பிஎஸ்- 3 வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளது. மேலும் மார்ச்31க்கு முன்பாக விற்பனை செய்திருந்தால் மட்டுமே அவற்றை ஏப்ரல்1ஆம் தேதிக்கு பிறகு பதிவு செய்யலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வணிக ரீதியான இழப்பை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தியிருந்தனர். வியாபாரத்தை விடவும் மக்களின் நலனே பெரிது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் 8.24 லட்சம் வாகனங்களின் விற்பனை தடை செய்யப்படுகிறது.

முன்னதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள், 96,000 வணிக ரீதியிலான வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் பிஎஸ்-3 தர வாகங்கள் கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், டீலர்களுக்கும் என சுமார் 20,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

ஒருபக்கம் இழப்பை சந்தித்தாலும் அதனை ஓரளவுக்காவது சரிக்கட்ட தீர்மாணித்துள்ள டீலர்கள் சிலர் வாகனங்களுக்கு 5,000 முதல் 20,000 வரை தள்ளுபடி அளித்து வருகின்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 31ஆம் தேதிக்குள் கெடு முடிய உள்ளதால் சலுகை விலையில் வாகனங்களை வாங்குபவர்கள், வாகனப்பதிவிற்கு முறையான ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்காவிட்டால் வாகனப்பதிவு செய்யப்படாது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








