இ20 பெட்ரோல் வேண்டாம் என கூறும் மக்கள்... கை விரித்த உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன நடக்க போகிறது?
இ20 பெட்ரோலுக்கு (E20 Petrol) எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இ20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலாக வேறொரு வழிமுறையை பின்பற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சில அறிவுரைகளை கூறியுள்ளது. அவை என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
நாடு முழுவதும் பெட்ரோலின் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைத்து, நாட்டின் செலவீனங்களை குறைப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.

இதற்காக மத்திய அரசு கடந்த சில வருடங்களாகவே மேற்கொண்டுவரும் முயற்சிகளுள் ஒன்றுதான், பெட்ரோல் (Petrol) உடன் எத்தனாலை கலந்து பயன்படுத்துவது ஆகும். ஏனெனில், எத்தனாலை தேவைக்கேற்ப உருவாக்கி கொள்ள முடியும் மற்றும் எத்தனாலின் மதிப்பானது பெட்ரோலை விட குறைவு ஆகும். முந்தைய காலங்களில் பெட்ரோல் உடன் மிகவும் குறைவான அளவிலான எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 20% எத்தனால் கலக்கப்படுகிறது.
அதாவது, பெட்ரோல் பங்க்களில் தற்போது விநியோகிக்கப்படும் பெட்ரோலில் 80% பெட்ரோல் மூலக்கூறுகளும், 20% எத்தனாலும் கலந்து வழங்கப்படுகிறது. இவ்வாறான பெட்ரோலை ஏற்கக்கூடிய அளவிற்கான என்ஜின் உடன் வாகனங்களை உருவாக்குமாறு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்தே மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த ஆரம்பித்தது. இருப்பினும், மக்களிடம் பயன்பாட்டில் இருக்கும் பழைய பெட்ரோல் வாகனங்களை அரசு மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கேற்ப சொல்லி வைத்தாற்போன்று, இ20 பெட்ரோலினால் பழைய பிஎஸ்3 (BS3) மற்றும் பிஎஸ்4 வாகனங்களில் பிரச்சனைகள் எழ ஆரம்பித்ததை அடுத்து, அது நாடு தழுவிய அளவில் பெரிய பிரச்சனையாக அமைந்தது. இதனை தொடர்ந்து, இ20 பெட்ரோலின் பயன்பாட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில், அந்த வழக்குகளை இன்று (செப்.1) விசாரித்த உச்ச நீதிமன்றம், பெட்ரோல் உடன் எத்தனாலை கலக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இ20 பெட்ரோலினால் பழைய பெட்ரோல் வாகனங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்த இந்த பொது நல வழக்குகளை எதிர்த்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்ட நிலையில், இவ்வாறான தீர்ப்பை வழங்கி மனுவை தள்ளுபடி செய்தனர். திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், அனைத்து விதமான வழிகளிலும் இதுகுறித்து ஆய்வு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னரே பெட்ரோல் உடன் 20% எத்தனாலை கலக்க முடிவு செய்ததாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அதேநேரம், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கூறிய வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதனையும் கருத்தில் ஏற்றுக் கொண்டு, அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் இ20 பெட்ரோல் மற்றும் முன்பு வழங்கப்பட்ட சாதாரணமான பெட்ரோல் என இரு விதமான ஆப்ஷன்களும் வாகன ஓட்டிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இரண்டில் எந்த பெட்ரோலை வாங்குவது என்பதை வாகன ஓட்டிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது நாம் ஏற்கனவே எதிர்பார்த்த தீர்ப்பே ஆகும். என்ன... நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாகவே வந்துள்ளது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின்படி, எந்த பெட்ரோலை தங்களது வாகனத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதை வாகன ஓட்டிகளே முடிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் குழப்பத்தை ஏற்படுத்த கூடும். ஏனெனில், இ20 பெட்ரோலுக்கு ஏற்ப அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்ட புதிய வாகனங்களை பயன்படுத்துபவர்களும் இ20-அல்லாத பெட்ரோலை கேட்டு அடம்பிடிக்க கூடும்.


Click it and Unblock the Notifications









