18 மணி நேரத்தில் 1271 கிமீ போகலாம்! சென்னைக்கு வருகிறது புதிய எக்ஸ்பிரஸ் சாலை!
இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலையாக டில்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை இருக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலை என்றால் எது தெரியுமா? பலருக்கும் இந்த விஷயம் தெரியாது. ஏன் என்றால் இந்த எக்ஸ்பிரஸ் சாலை இதுவரை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை. இது பயன்பாட்டிற்கு வந்தால் மிகப்பெரிய பலனை தமிழ்நாடு பெறும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பது அந்த நாட்டில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து வசதிகள் தான் என நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். உள்நாட்டில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருந்தால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர முடியும். இதனால் பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்லாமல் அனைத்து விதமான வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு போக்குவரத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருப்பது தேசிய நெடுஞ்சாலைகள் தான். இதில் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலைகள் எல்லாம் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலையாக டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை தான் இருக்கிறது. இந்த சாலை சுமார் 1350 கி.மீ நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் ஒரு சில பகுதிகள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. விரைவில் இது ஒட்டுமொத்தமாக டெல்லியில் இருந்து மும்பை வரை இணைக்கும் வகையில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை குறித்த பேச்சு தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதான் சூரத் மற்றும் சென்னையை இணைக்கும் வகையிலான இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலையாக உருவாக்கப்படுகிறது.

இந்த சாலை சுமார் 1271 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வழியாக இணைக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சாலைக்கான பணிகள் எல்லாம் துவங்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த சாலைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது இதில் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை தற்போது நான்கு வழி சாலையாக கட்டமைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இதை 6 வழியாகவோ, 8 வழியாகவோ மாற்றவும் அரசு ஏற்பாடுகளை தற்போதை செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து சூரத்திற்கு சாலை வழியாக பயணிக்க வேண்டும் என்றால் 1600 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது இந்த சாலை அமைக்கப்பட்டால் அது 1270 கிலோ மீட்டராக குறையும்.

தற்போதைய சூழ்நிலையில் சென்னையில் இருந்து சூரத்திற்கு பயணிக்க சாலை வழியாக 35 மணி நேரம் பயண நேரம் ஆகிறது. இந்த சாலை வந்துவிட்டால் இது பாதியாக குறைக்கப்பட்டு 18 மணி நேரத்தில் சென்னையில் இருந்து சூரத்திற்கு பயணம் செய்து விட முடியும். இந்த சாலை மொத்தம் ஆறு மாநிலங்களை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துவங்கும் இந்த சாலை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது. இந்த சாலை இந்த மாநிலங்களில் உள்ள முக்கிய ஊர்களான திருப்பதி, கடப்பா, குர்னூல், கலபுர்கி, சோலாப்பூர், அகமது நகர், நாசிக் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த சாலை உருவாக்கப்படுகிறது. இந்த சாலை 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலை இந்தியாவில் உள்ள தொழிற்சாலை வசதிக்கு மிக முக்கியமான சாலையாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இந்த சாலை கொண்டு வருவதன் மூலம் ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு விதமான தொழில் வளர்ச்சிகள் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் நிச்சயம் இது இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டமாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலைகள் எந்த அளவுக்கு தரமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது இருக்கும் என்பது அனைத்து நாடுகளிலும் நாம் கண்கூடாக பார்த்த விஷயமாக இருக்கிறது. அதனால் இந்தியாவில் தரமான சாலைகளை கட்டமைப்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









