நம்பவே முடியல... இந்தியாவில் அமைக்கப்பட்ட புதுமையான சாலை... மூக்கின் மேல் விரல் வைக்கும் உலக நாடுகள்!
இந்தியாவின் முதல் ஸ்டீல் சாலை போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத் (Gujarat) மாநிலத்தின் சூரத் (Surat) நகரம் புதுமையான சாலை ஒன்றை பெற்றுள்ளது. 100 சதவீதம் ஸ்டீல் (Steel) மூலம் அமைக்கப்பட்ட சாலையை சூரத் பெற்றுள்ளது. தொழிற்சாலைகளில் உருவான ஸ்டீல் கழிவுகள் மூலமாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய சாலை அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை சூரத் தற்போது பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் ஸ்டீல் சாலை (India's First-ever Steel Road) தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த ஸ்டீல் ரோடு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த ஸ்டீல் ரோடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council Of Scientific And Industrial Research - CSIR), மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Road Research Institute - CRRI), ஸ்டீல் அமைச்சகம் (Ministry of Steel) மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஸ்டீல் சாலையை உருவாக்கியுள்ளன.

இந்தியாவில் அமைக்கப்படும் வழக்கமான சாலைகளை காட்டிலும், இந்த ஸ்டீல் சாலை நீடித்து உழைக்க கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் மழைக்காலங்களில் சாலைகள் சேதமடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஸ்டீல் சாலை, மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை தாங்க கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அவ்வளவு எளிதில் சேதமடையாது.

சூரத் நகரின் ஹசீரா இன்டஸ்ட்ரியல் ஏரியாவில், இந்த ஸ்டீல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், போக்குவரத்திற்காக இந்த ஸ்டீல் சாலையை தற்போது திறந்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஸ்டீல் தொழில்துறையில் இருந்து உருவான கழிவுகளை கொண்டு இந்த சாலையை அமைத்துள்ளனர்.

நீடித்து உழைக்க கூடிய தன்மையை மனதில் வைத்துதான், இந்த ஸ்டீல் சாலையை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் ஸ்டீல் தொழில்துறையில் வீணாகும் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்கு இதுபோன்ற ஸ்டீல் சாலைகள் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஸ்டீல் தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் நிறைய கழிவுகளை உருவாக்குகிறது.

அவற்றை மாற்று தேவைகளுக்கு பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. ஆனால் ஸ்டீல் சாலைகளை கட்டமைப்பதற்கு அவற்றை பயன்படுத்துவதன் மூலம் நிறைய பிரச்னைகளை தீர்க்கலாம். சூரத் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் சாலை திட்டம் வெற்றி பெற்றால், இந்தியாவில் இன்னும் பல்வேறு இடங்களில் ஸ்டீல் சாலைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தரமான சாலைகள் வேகமான போக்குவரத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி செய்யும் என்பதுதான் இதற்கான மிக முக்கிய காரணம்.

அத்துடன் தரமான சாலைகள், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் உதவி செய்யும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். எனவே இந்தியாவில் தரமான சாலைகளை வேகமாக கட்டமைப்பதில் மத்திய அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவிற்கு இணையான சாலைகளை இந்தியாவிலும் கட்டமைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதுடன், அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அத்துடன் வழக்கமான ஐசி இன்ஜினில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதன் காரணமாக இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களும், சிஎன்ஜி வாகனங்களும் அதிகளவில் விற்பனையாக தொடங்கியுள்ளன. எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை இயக்குவதற்கான செலவு குறைவு என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications








