சூர்யகுமார் யாதவ் இப்படி ஒரு காரை வாங்கிட்டாரா! ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
மிக மிக விலை உயர்ந்த காரை கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வேறு யாருமில்லைங்க, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது சூப்பரான கேட்ச்சை பிடித்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் சூர்யகுமார் யாதவ்-தான் அவர் ஆவார். இவரிடத்தில் ஏற்கனவே விலை உயர்ந்த மற்றும் அரிய வகை கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கிரிக்கெட் வீரர் உலகின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கிராண்ட் எடிசன் (Mercedes Benz G63 AMG Grand Edition)-ஐ அவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரை சூர்யகுமார் வாங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக CS12 Vlogs எனும் யுட்யூப் சேனல் ஓர் வீடியோவை பகிர்ந்துள்ளது. அது ஓர் குறுகிய வீடியோவையே பகிர்ந்திருக்கின்றது.

அந்த வீடியோ கிளிப்பில், கிரிக்கெட் வீரர் மேட் பிளாக் நிறத்தினாலான பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி சொகுசு எஸ்யூவி காரை ஓட்டி வரும் காட்சிகளே இடம் பிடித்திருக்கின்றன. வீடியோ சிறியது, அதேபோல், காரையும் மிக தெளிவாக பார்க்க முடியவில்லை. இருப்பினும் வாகனத்தின் ஈர்க்கக்கூடிய தோற்றத்தை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகின்றது.
மேலும், சூர்யகுமார் யாதவ் வாங்கி இருப்பது பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி-யின் கிராண்ட் எடிசன் என்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளையில், இது ஓர் மிக அரிய வகை எடிசன் ஆகும். உலக அளவில் வெறும் ஆயிரம் யூனிட்டுகள் மட்டுமே இந்த பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதில், இந்தியாவில் 25 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே அதில் ஓர் யூனிட்டை சூர்யகுமார் யாதவ் தன் வசப்படுத்தி இருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பை கடந்த ஆண்டே பென்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
ஏற்கனவே, மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach), எஸ்-கிளாஸ் (S-Class) மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி (Mercedes-AMG) வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு இந்த காரை வாங்குவதில் நிறுவனம் முன்னுரிமை அளித்ததாகக் கூறப்படுகின்றது. கிராண்ட் எடிசனில் பல்வேறு சிறப்புகளை மெர்சிடிஸ் நிறுவனம் சேர்த்திருக்கின்றது. அந்த பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாக அதன் நிற அலங்கரிப்பு இருக்கின்றது.
தங்க நிற கிராஃபிக்குடன் கூடிய மேனுஃபேக்சர் நைட் பிளாக் மேங்கோ (Manufaktur Night Black Magno) வண்ணமே பன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், காருக்கு அதிக முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் பொருட்டு 22 அங்குல அலாய் வீல்கள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இதுதவிர, ஜி63 ஏஎம்ஜி கிராண்ட் எடிசனை அலங்கரிக்கும் விதமாக பம்பர்கள், முன் பக்க ஸ்கிட் பிளேட், ஸ்பேர் வீல் ரிங் மற்றும் இருக்கை தையல் உள்ளிட்டவற்றில் தங்க நிற உச்சரிப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல தனித்துவமான வடிவமைப்பு கூறுகளை இந்த கார் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, கிராண்ட் எடிஷன் பேட்ஜ்கள் மற்றும் நப்பா லெதர் இருக்கைகள் உள்ளிட்டவற்றையும் இந்த பதிப்பு தன்னுள் கொண்டிருக்கின்றது. இதுபோன்று அலங்கரிப்பு விஷயத்தில் மட்டுமே கிராண்ட் பதிப்பு நிலையான ஜி63 ஏஎம்ஜி இடமிருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. ஆனால், எஞ்சின் விஷயத்தில் இது வழக்கமான பதிப்புடன் அப்படியே ஒத்துப் போகும்.
இதிலும், 585 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஒரே யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய காஸ்ட்லியான காரையே சூர்யகுமார் யாதவ் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளையில், அவரிடத்தில் இதுபோன்று இன்னும் பல விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) மற்றும் அரிய வகை கார் மாடலான நிஸான் ஜுங்கா 1 டன் பிக்-அப் டிரக்கையும் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூர்யகுமார் யாதவ் இந்த சொகுசு காரை வாங்கி இருப்பதன் வாயிலாக அவர் சொகுசு வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் சொகுசு கார் விரும்பிகளாகவே இருக்கின்றனர். ஆனால், யாதவர் சற்றே வித்தியாசமானவர் என்பதற்கு சான்றாக நிஸான் ஜுங்கா கார் மாடல் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








