சூர்யகுமார் யாதவ் உண்மையில் வாங்கியிருக்கும் கார் இதுதான்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்!
சூர்யகுமார் யாதவ் வாங்கியிருக்கும் புதிய காரை பற்றி தவறான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் உண்மையில் என்ன காரை வாங்கியுள்ளார்? அந்த காரின் விலை என்ன? என்பது குறித்த தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்து வருபவர் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav). இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாது, பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரிலும், சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். எனவே சொகுசு கார்களை வாங்குவதை சூர்யகுமார் யாதவ் வழக்கமாக வைத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவிடம் ஏற்கனவே நிறைய விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இதில், நிஸான் ஜோங்கா (Nissan Jonga), ரேஞ்ச் ரோவர் வெளார் (Range Rover Velar), மினி கூப்பர் எஸ் (MINI Cooper S) மற்றும் ஆடி ஆர்எஸ்5 (Audi RS5) போன்ற கார்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு விலை உயர்ந்த காரை சூர்யகுமார் யாதவ் வாங்கியுள்ளார்.

அது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்எஸ் 63 (Mercedes-AMG GLS 63) கார் ஆகும். சூர்யகுமார் யாதவ் வாங்கியிருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கூபே (Mercedes-Benz GLE Coupe) என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்த தகவல்கள் தவறானவை. அவர் வாங்கியிருப்பது, இந்திய சந்தையில் தற்போது விற்பனையிலேயே இல்லாத மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்எஸ் 63 கார் என்பதுதான் சரியான தகவல் ஆகும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்எஸ் 63 காரை சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் முன்பதிவு செய்திருந்தார். இந்த சூழலில் ஆட்டோ ஹேங்கர் என்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் மூலம் அவருக்கு இந்த மிகவும் விலை உயர்ந்த கார் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது மும்பையில் உள்ள டீலர்ஷிப் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்எஸ் 63 கார் இந்திய சந்தையில் கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் இந்திய சந்தையில் இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது இந்த கார் இந்தியாவில் விற்பனையிலேயே இல்லை. அப்படி இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் எப்படி இந்த காரை வாங்கியிருப்பார்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி, சூர்யகுமார் யாதவ் இந்த காரை இறக்குமதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவிற்கு தற்போது இந்த கார் டெலிவரி செய்யப்பட்டிருப்பதன் மூலம், இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மீண்டும் இந்த காரை அப்டேட் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் தற்போது வாங்கியுள்ள இந்த புதிய காரின் விலை சுமார் 2 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யகுமார் யாதவ் இந்த சூப்பரான காரை டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆட்டோ ஹேங்கர் டீலர்ஷிப், சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சூர்யகுமார் யாதவிற்கு காரை டெலிவரி கொடுத்துள்ளது.

இந்திய அணியின் சீருடையில் சூர்யகுமார் யாதவ் பந்துகளை விளாசுவது போன்ற சிறிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருப்பதை, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் நம்மால் காண முடிகிறது. அத்துடன் ஸ்டம்ப்கள் மற்றும் பலூன்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. மிகவும் விலை உயர்ந்த காரை வாங்கியுள்ள சூர்யகுமார் யாதவிற்கு தற்போது சமூக வலை தளங்கள் மூலமாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ் மட்டுமல்லாது, மற்ற கிரிக்கெட் வீரர்களும் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வரிசையில் தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காரை வாங்கியிருந்தார்.

இந்தியாவில் இந்த காரின் ஆன் ரோடு விலை சுமார் 8.25 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த காரில் வந்து, ஐதராபாத் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அல்லு அர்ஜூன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








