எல்லாத்துக்கும் இராணுவத்தினர் வர மாட்டாங்க... சுற்றுலா வந்த இடத்தில் பல லட்ச ரூபாய் கார்களுக்கு நேர்ந்த கதி!!
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தாங்கள் தங்களது வாழ்நாளில் சந்திக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோவாகவோ அல்லது போட்டோவாகவோ அல்லது பதிவுகளாகவோ சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, எங்கேனும் அழகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால், அதனை முடிந்தவரையில் அனைவருக்கும் தெரிவிக்கவே நம்மில் பலர் விரும்புகிறோம். ஆனால், நமது இத்தகைய செயல்கள் தான் பல சமயங்களில் ஆபத்தாக முடிந்துள்ளது. அவ்வாறான ஒரு சம்பவத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான அழகிய கணவாய், பராலாச்சா கணவாய் ஆகும். மணாலி மற்றும் லே நெடுஞ்சாலைக்கு இடையில் அமைந்துள்ள இது அதன் அழகிய இடங்களுக்காக மட்டுமில்லாமல், அதன் கரடு, முரடான நிலப்பரப்பிற்காகவும் பிரபலமானது ஆகும். இமயமலை தொடருக்கு அருகே இருக்கும் வறண்ட பகுதியான பராலாச்சா கணவாய் ஆனது பார்க்கும் எவரொருவரையும் கவரக்கூடியது ஆகும்.

குறிப்பாக, காலியான நிலப்பகுதியாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இந்த பகுதியில் செல்லும்போது கை நமநமவென்று இருக்கும். ஆனால், இந்த பகுதியில் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை. அதாவது, சாலையில் வேண்டுமாயின் வாகனங்களை ஓட்டலாமே தவிர்த்து, சாலையில் இருந்து வாகனங்களை கீழே இறக்க அனுமதி இல்லை என கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு அழகிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக பராலாச்சா கணவாய் விளங்கும் நிலையில், அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் மதிக்காமல் சில வாகனம் ஓட்டிகள் இந்த கணவாயில் இருக்கும் சிறிய குளத்திற்கு அருகே தங்களது கார்களை கொண்டு சென்று ஈரமான மணலில் சிக்கி உள்ளனர். பின்னர் அவர்களை இந்திய இராணுவத்தினர் தங்களது வாகனங்களை கொண்டு மீட்டுள்ளனர்.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கருப்பு நிறத்திலான ஃபோர்டு எண்டேவியர் (Ford Endeavour) மற்றும் வெள்ளை நிறத்திலான மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரில் சிலர் பராலாச்சா கணவாய் பகுதிக்கு சென்று மலைகளை சுற்றி பார்த்த பின்னர், அங்கு தேங்கி இருந்த நீருக்கு அருகே தங்களது கார்களை கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது ஒரு கட்டத்தில் கார்கள் இரண்டின் சக்கரங்களும் சேற்றில் சிக்கி உள்ளன. இத்தனைக்கும் கார்கள் இரண்டும் 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்டவை என கூறப்படுகிறது. அப்படியிருந்தும் சேற்றில் சிக்கிய கார்களின் சக்கரங்களை டிரைவர்களால் வெளியே கொண்டுவர முடியவில்லை. டிரைவர்களுக்கு அந்த அளவிற்கு திறன் இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த நிகழ்வில் இருந்து பராலாச்சா கணவாய் எந்த அளவிற்கு மூர்க்கத்தனமான நிலப்பரப்பை கொண்டது என்பதை அறியலாம்.
இதனால் வேறு வழியில்லாமல் அருகில் இருந்த இந்திய இராணுவத்தின் உதவியை நாடி இந்த சுற்றுலா பயணிகள் தங்களது கார்களை மீட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டவர், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை கடுமையாக திட்டி தீர்த்து இருப்பதுடன், இராணுவத்தினர் தங்களது முக்கியமான பணிகளை விட்டுட்டு இந்த வேலையை செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகவும், இத்தகைய செயல்களை தடுக்க அதிக அபராதங்களும், கடுமையான வழிமுறைகளும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்வில், ஆபத்தையும், விழிப்புணர்வையும் மீறி முதலில் ஒருவர் தனது காரை கொண்டு சென்றதாகவும், அதனை பார்த்து இன்னொருவர் காரை கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஒருவர் என்ன செய்கிறாரோ, அதில் இருக்கும் ஆபத்துகள், சமூக அக்கறையை உணராமல் அதனை அப்படியே பின்பற்றும் பழக்கம் நம் மக்களிடையே நிறைய பேரிடம் உள்ளது. நல்லவேளையாக இந்த கார் ஓட்டிகளுக்கு உதவ உடனடியாக இராணுவத்தினர் வந்தனர். இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்.


Click it and Unblock the Notifications








