இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்குற மாதிரி மெஷின்ல போட்டு பைக்கை அரைத்த அதிகாரிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் இட்லிக்கு தேங்காய் சட்னி அரைப்பதைப் போல விலை உயர்ந்த சூப்பர் பைக் ஒன்று எந்திரத்தில் போட்டு அரைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. மெஷினில் போட்டு அரைக்கப்பட்ட அந்த பைக்கின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என கூறப்படுகின்றது.
இருசக்கர வாகன பிரியர்களின் ஈரக்குலையை நடுங்கச் செய்யும் அளவுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது எங்கு? மேலும், இந்த அளவு மோசமான நடவடிக்கையை அந்த விலை உயர்ந்த பைக்கின் எடுப்பதற்கான காரணம் என்ன? என்பது போன்ற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிடிஎஃப் வாசன் போன்று வாகனங்களை அலட்சியமாக ஓட்டும் நபர்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பார்கள் என நினைச்சுக்காதீங்க. இந்த உலகம் முழுவதும் அவரைப் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதேபோல், இத்தகைய ரைடர்கள் மீது நம் காவல்துறையைப் போலவே உலக நாடுகளில் உள்ள காவல்துறையினரும் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
சொல்லப் போனால் நம் ஊரில் மேற்கொள்ளப்படுவதைவிட மிக மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உலக நாடுகளும் உள்ளன. அத்தகைய நடவடிக்கையாகவே, விலை உயர்ந்த பைக் சட்னிக்கு தேங்காய் அரைப்பதைப் போல தற்போது அரைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கடுமையான நடவடிக்கைக்கு அந்த பைக்கின் உரிமையாளர் பொதுவெளியில் ஸ்டண்ட் செய்தது மட்டுமே காரணமாக இருக்கின்றது.
இளைஞரின் சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே காவலர்களின் கண்களிலும் அந்த வீடியோ பட்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து, பதிவெண்களின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை அடையாளம் கண்ட கத்தார் உள்துறை அமைச்சக அதிகாரிகள், அந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பொதுவெளியில் வைத்து அந்த பைக்கை மெஷினில் போட்டு அரைத்து ஸ்கிராப் செய்தனர். அவருக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஓட்டி செயல்பட்டதாகக் கூறி இந்த கடுமையான நடவடிக்கையை கத்தார் காவல்துறையினர் எடுத்திருக்கின்றனர். வேறு யாரும் இதுமாதிரியான செயல்பாட்டில் ஈடுபடக் கூடாது என்பதும் இந்த கடுமையான நடவடிக்கைக்கு பின்னால் உள்ள மிகப் பெரிய காரணமாக இருக்கின்றது.

இருப்பினும், இந்த சம்பவம் இருசக்கர வாகன காதலர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அவர்களின் கண்களில் ரத்த கண்ணீரை இந்த நிகழ்வு வரவைத்துவிட்டது என்றே கூறலாம். அந்த அளவு கடுமையான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது. ஸ்கிராப் எந்திரத்தால் அரைக்கப்பட்ட இருசக்கர வாகனம் சுஸுகி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் வகை பைக் மாடல் ஆகும்.
ஜிஎஸ்எக்ஸ் ஆர் மாடலையே அதிகாரிகள் துளியளவும் இரக்கமின்றி அரைத்திருக்கின்றனர். இந்த பைக் உலக சந்தையில் பல்வேறு தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதன் ஆரம்ப விலையே ரூ. 19.82 லட்சம் ஆகும். ஓர் ஆரம்ப நிலை பிரீமியம் தர கார்களுக்கு இணையான விலையிலேயே இந்த பைக் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இத்தகைய ஆடம்பர பைக்கையே கத்தார் அதிகாரிகள் அழித்து இருக்கின்றனர். மேலும், இந்த மாதிரியான ஸ்டண்ட் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதற்காக அதை அழிக்கும் வீடியோவை இணையத்தில் கத்தார் அதிகாரிகள் வெளியிட்டு இருக்கின்றனர். இது ஸ்டண்ட் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஈரக்குலையை நடுங்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
சமீபத்தில் தமிழகத்தில் ஸ்டண்டை செய்து விபத்தில் சிக்கியதன் விளைவாக யுட்யூபரும், இரண்டு சக்கர வாகன பிரியருமான டிடிஎஃப் வாசன் மீது தமிழக காவல்துறை மிக மிக கடுமையான நடவடிக்கையை எடுத்தது. கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு. இதுமட்டுமின்றி, சில நாட்களுக்கு அவர் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக காவல்துறை எடுத்த இந்த நடவடிக்கையையே பலர் மிகக் கொடியது என புலம்பிக் கொண்டிருந்தனர். இந்த மாதிரியான சூழலிலேயே இதைவிட மிக மிக கடுமையான நடவடிக்கைகள் எல்லாம் இந்த உலகத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு சான்றாக சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர் பைக் அழிப்பு சம்பவம் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









