கொத்து கொத்தாக உயிர்கள் பலியாகும் நிலையில் இளைஞர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்
கொத்து கொத்தாக உயிர்கள் பலியாகி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். அதிவேகத்தில் பயணம் செய்வது இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

சாலை விபத்துக்களால் அதிகம் பேர் உயிரிழப்பது பெரும் பிரச்னையாக மாறி வரும் நிலையில், மறுபக்கம் அதிவேகத்தில் பறக்கும் சூப்பர் பைக்குகளும் இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகின்றன. புதிய பிராண்டுகளின் வருகையில், தற்போது வாடிக்கையாளர்கள் பலர் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை வாங்க தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் சாலைகளின் தரம் மேம்பட்டிருப்பது அவர்கள் அதிவேகத்தில் பயணிக்க உதவுகிறது. தற்போது வளைவு, நெளிவு இல்லாத நேராக பயணிக்கும் நெடுஞ்சாலைகள் நமது நாட்டில் இருக்கின்றன. இத்தகைய சாலைகளில், அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை வைத்திருப்பவர்கள் அதிவேகத்தில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அவ்வாறு அதிவேகத்தில் பறக்கும் பைக்குகளின் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) மோட்டார்சைக்கிள் மின்னல் வேகத்தில் பறப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

டர்போ எக்ஸ்ட்ரீம் என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ராவிற்கு ரோடு ட்ரிப் செல்ல திட்டமிட்டு கொண்டிருக்கும் 5 சூப்பர் பைக் ரைடர்களை காட்டுவதுடன் வீடியோ தொடங்குகிறது. அப்போது இந்த பைக்கர்கள் குழு, தாஜ் எக்ஸ்பிரஸ்வேயின் ஸ்டார்ட்டிங் பாயிண்ட்டில் இருந்தது. தாஜ் எக்ஸ்பிரஸ்வேதான் யமுனா எக்ஸ்பிரஸ்வே எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் இருக்கும் பைக்குகளை ஒருவர் அறிமுகம் செய்கிறார். இந்த குழுவில், கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்10ஆர், யமஹா ஒய்இஸட்எஃப் ஆர்-1, பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் மற்றும் சுஸுகி ஹயபுசா உள்ளிட்ட பைக்குகள் இருக்கின்றன. ட்ரிப்பை தொடங்கிய உடனேயே அந்த குழுவினர் அதிவேகத்தில் பயணிக்க ஆரம்பித்தனர்.

குறிப்பாக சுஸுகி ஹயபுசா பைக்கில் பயணம் செய்தவர் அதிவேகத்தில் பறந்தார். அந்த பைக் வேகத்தை பெற தொடங்கியதும், மற்ற பைக்குகள் பின்தள்ளப்படுகின்றன. சுஸுகி ஹயபுசா ரைடர் மிக எளிதாக 3 இலக்க வேகத்தை எட்டுகிறார். வேகம் தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க, இறுதியாக மணிக்கு 300 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் அந்த பைக் பறக்கிறது!!

அதன்பின் அந்த ரைடர் ஸ்லோ செய்து விடுகிறார். சுஸுகி ஹயபுசா பைக் உண்மையிலேயே அதிவேகத்தில் பறக்க கூடிய திறன் வாய்ந்தது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 1,340 சிசி இன்லைன் நான்கு சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது.

ஆனால் இந்தியாவின் பொது சாலைகளில் இவ்வளவு அதிவேகத்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. இவ்வளவு வேகத்தில் பயணம் செய்பவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருந்தாலும் கூட, இந்திய சாலைகளில் எப்போது என்ன நடக்கும்? என்பதை கணிக்க முடியாது. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிக்க மாட்டார்கள்.
மேலும் கால்நடைகளும் திடீரென குறுக்கே வந்து விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அவ்வாறான சமயங்களில் இவ்வளவு வேகத்தில் பயணம் செய்தால், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். எனவே விபத்து தவிர்க்க முடியாததாகி விடும். இதனால் இவ்வளவு வேகத்தில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications








