இதுவும் குஜராத்துக்கு தானா? தொழிற்சாலையை வளைத்து, வளைத்து கட்டும் சுஸுகி!!
மாசு அற்ற போக்குவரத்துக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடே, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவினால் இயங்கும் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும் முயற்சி ஆகும். இந்த வகையில், சுஸுகி மோட்டார் கார்ப்பிரேஷன் (Suzuki Motor Corporation) நிறுவனம் வித்தியாசமாக யோசித்து, உயிரிவாயு எனப்படும் பயோ கேஸ் (Biogas)-இல் அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. இதன்படி, இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் 5வது பயோ கேஸ் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பிரேஷன் நிறுவனம் இந்தியாவில் அதன் 5வது பயோ கேஸ் தொழிற்சாலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுஸுகி மோட்டார் கார்ப்பிரேஷனின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையம், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) மற்றும் பனாஸ் பால் பண்ணை இடையே இந்த ஒப்பந்தம் குஜராத்தில் கையெழுத்தாகி உள்ளது.

குஜராத்தில் உள்ள பனாஸ் பால் பண்ணையின் சானந்தர் தொழிற்சாலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் பனாஸ் பால் பண்ணையின் தலைவர் சங்கர் சௌத்ரி, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர் எஸ் ராஜீவ் மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பிரேஷனின் தலைவர் டோஷிஹிரோ சுஸுகி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
மேலும், 2,500க்கும் அதிகமான உள்ளூர் பால் பண்ணையாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பயோ கேஸ் மூலமாக கிராமப்புற பகுதிகளை மேம்படுத்துவது மற்றும் இந்தியாவில் கார்பன் மாசு உமிழ்வை குறைப்பது இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம் ஆகும். சுஸுகி மோட்டார் - தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் - பனாஸ் பால் பண்ணை இவை மூன்றும் ஏற்கனவே கூட்டணியில் உள்ளன.
இந்த கூட்டணியில், குஜராத்தின் பனாஸ்கந்தாவில் 4 பயோ கேஸ் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தற்போது கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தம் புதிய 5வது தொழிற்சாலைக்கானது ஆகும். சுஸுகியின் புதிய பயோ கேஸ் தொழிற்சாலை குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் தாரட் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பயோ கேஸ் மாருதி சுஸுகியின் சிஎன்ஜி வாகனங்களுக்கு பயன்படுகிறது.
அத்துடன், இந்திய கிராமப்புறங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதும் இந்த கூட்டணி நிறுவனங்களின் நோக்கமாக உள்ளது. இதுகுறித்து சுஸுகி மோட்டார் கார்ப்பிரேஷனின் தலைவர் டோஷிஹிரோ சுஸுகி கூறுகையில், "பனாஸ் பால் பண்ணை மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம், பயோ கேஸ் உற்பத்தி ஆலை மற்றும் கிராமப்புற மொபைலிட்டி சேவை என இரு புதிய வணிகங்களை துவங்கவுள்ளோம்.
மூன்று நிறுவனங்களின் ஒவ்வொரு உறுப்பினரும் புதிய மாதிரியான வாழ்க்கை முறையை உருவாக்கவும், பனாஸ்கந்தா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் யோசனைகளை வழங்குவார்கள்" என தெரிவித்துள்ளார். மாருதி சுஸுகியில் இருந்து தற்சமயம் மொத்தம் 17 விதமான சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மிக பிரபலமானவை என்று பார்த்தால், பிரெஸ்ஸா சிஎன்ஜி, எர்டிகா சிஎன்ஜி மற்றும் ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி-ஐ சொல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இயற்கை எரிவாயுவும், பயோ கேஸும் மூலக்கூறு அடிப்படையில் ஒன்றோடு ஒன்று வேறுப்படுகின்றன. இருப்பினும், பயோ கேஸை சில வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி சிஎன்ஜி வாகனங்களில் பயன்படுத்த முடிகிறது. ஆதலால், சுஸுகியின் புதிய 5வது பயோ கேஸ் தொழிற்சாலை மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








