15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாங்கிய ஆப்பிரிக்க மன்னர்... மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மனைவியர் மற்றும் தனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர். மக்கள் பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், சுபபோகமாக வாழும் இந்த நிகழ்கால நீரோ மன்னன் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆப்பிரிக்காவிலுள்ள ஸ்வாஸிலாந்து நாட்டின் மன்னராக இருந்து வருபவர் மூன்றாம் ஸ்வதி. ஸ்வாஸி அரச பரம்பரையை சேர்ந்த இவர் சுகபோகமாக வாழ்ந்து வருகிறார். தென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு இடையே உள்ளது ஸ்வாஸி நாடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த ஸ்வாஸி நாட்டின் மக்கள் பஞ்சத்தில் தத்தளித்து வருகின்றனர்.

இந்த சூழலில், மன்னர் செய்த காரியம்தான் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ஆம், மூன்றாம் ஸ்வதி மன்னருக்கு 15 மனைவிகள் மற்றும் 23 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

இந்த 19 ரோல்ஸ்ராய்ஸ் செடான் ஆடம்பர கார்களையும் இறக்குமதி செய்து வாங்குவதற்காக இந்திய மதிப்பில் ரூ.175 கோடியை அவர் செலவழித்துள்ளாராம். ஒவ்வொரு மனைவியும் விரும்பியவாறு பல்வேறு கூடுதல் வசதிகளுடம் இந்த கார்களில் இடம்பெற்றுள்ளன.

இது மட்டுமல்ல, தனக்காக ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் சொகுசு எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்து வாங்கி இருக்கிறார். அந்த காரில் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஏராளமான கஸ்டமைஸ் பணிகளையும் அவர் செய்து வாங்கி இருக்கிறார்.

இத்துடன் நின்றதா இவரது ஆடம்பரம் என்றால், அதுதான் இல்லை. தனது பிள்ளைகள் மற்றும் ஸ்வாஸி அரச பம்பரையினர் பயன்பாட்டிற்காக 120 புதிய பிஎம்டபிள்யூ சொகுசு செடான் மற்றும் எஸ்யூவி ரக கார்களையும் ஆர்டர் செய்துள்ளாராம்.

இந்த புதிய கார்கள் தவிர்த்து, மன்னர் மூன்றாம் ஸ்வதியிடம் ஏற்கனவே 20 மெர்சிடிஸ் மேபக் புல்மேன் கார்களும், ஒரு மேபக் 62 கார் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார்கள் உள்ளனவாம். இதுதவிர்த்து, சொந்த பயன்பாட்டிற்காக சில தனி விமானங்களும் உள்ளன.

இந்த கார்களை வாங்குவதை விட இந்த கார்களை பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும், இத்தனை கார்களை பராமரிப்பதற்காக தனி சர்வீஸ் மையம் தேவைப்படும். அதாவது, அரண்மனையில் இருக்கும் வாகனங்களுக்காக மட்டும் தனி சர்வீஸ் மையம் அமைக்க வேண்டி இருக்கும்.

வாகனங்களை டெலிவிரி கொடுப்பதற்கான விசேஷ டிரக்கில் 19 ரோல்ஸ்ராய்ஸ் செடான் கார்களும், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியும் மன்னர் வசம் டெலிவிரி கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட படங்கள் வீடியோ வெளியாகி இருக்கின்றன.

டிரக்கில் இருந்து இறக்கப்பட்ட கார்கள் மன்னர் இருப்பிடத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ஒரே நேரத்தில் பல வண்ணங்களில் சாலையில் அந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் ரதம் போல செல்லும் காட்சிகள் பார்ப்போரை வியக்க வைக்கிறது.

இதனிடையே, மன்னர் இவ்வளவு கார்களை வாங்கிய விவகாரத்தை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தை அந்நாட்டு பிரதமர் அம்புரோஸ் நியாயப்படுத்தி உள்ளார். அதாவது, நாட்டின் அரசு விதிகளின்படியே மன்னருக்கு புதிய வாகனங்கள் வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மன்னரின் பழைய கார்கள் 5 ஆண்டுகள் பழமையாகிவிட்டதால், புதிய கார்களை வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்நாட்டில் 63 சதவீத மக்கள் வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர்.

மேலும், மோசமான பொருளாதார நிலை காரணமாக, ஆங்காங்கே அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது. அரசு அலுவலங்கள் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. இந்த சூழலில், மன்னரின் இந்த ஆடம்பர செலவு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
Image Courtesy: Mzilikazi wa AfrikaVerified account/Twitter


Click it and Unblock the Notifications








