ரிலையன்ஸ் உடன் இணைந்த ஸ்விக்கி... என்ன காரணத்திற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க?
ரிலையன்ஸ் உடன் ஸ்விக்கி நிறுவனம் இணைந்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனம், தனது டெலிவரி சேவையில் மின் வாகனங்களை சோதனையோட்டமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்தே ரிலையன்ஸ் உடனான கூட்டணி குறித்த அறிவிப்பை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. இரு நிறுவனங்களின் கூட்டணியானது மின் வாகனங்களுக்கு சார்ஜேற்றப்பட்ட பேட்டரியை வழங்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.

ஆம், ஸ்விக்கியின் டெலிவரி சேவையில் பயன்படுத்தப்பட இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையான பேட்டரிகளை ரிலையன்ஸே விநியோகிக்க இருக்கின்றன. நாள் ஒன்றிற்கு 8 லட்சம் கிமீட்டர்கள் மின் வாகனங்களைக் கொண்டு டெலிவரி செய்யும் இலக்கை நோக்கி ஸ்விக்கி நகர தொடங்கியிருக்கின்றது.

இந்த இலக்கை 2025ம் ஆண்டிற்குள் நெருங்கிவிடுவோம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஸ்விக்கி நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு மட்டுமின்றி மேலும் ஓர் நிறுவனத்துடனும் கூட்டணியைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி இ-வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ லெக்ட்ரோ உடனே அது கூட்டணி சேர்ந்துள்ளது.

இந்த கூட்டணியானது தங்களுக்கு தேவையான எலெக்ட்ரிக் வாகனங்களை பெற்றுக் கொள்வதற்காக செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சோதனையோட்டமாக தொடங்கப்பட்டிருக்கும் மின் வாகன பயன்பாடு பெங்களூரு, புது தில்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலேயே செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெட்ரோலால் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் மின் வாகனங்களுக்கு மிகக் குறைந்தளவே பராமரிப்பு செலவு ஏற்படும். இந்த காரணத்திற்காகவே ஸ்விக்கி தங்களது டெலிவரி பார்ட்னர்களுக்கு மின் வாகனத்தை பரிந்துரைத்துள்ளது. இவற்றை பயன்படுத்த 40 சதவீதம் மட்டுமே செலவாகும்.

இதுகுறித்த ஆய்வை மேற்கொள்ளவே சோதனையோட்டத்தின் அடிப்படையில் மின் வாகன பயன்பாட்டை ஸ்விக்கி தொடங்கியிருக்கின்றது. இதன் மூலம் நிறுவனத்திற்கு பெரும் லாபம் ஏற்படுவதோடு, நாட்டில் காற்று மாசுபாடு குறையவும் வழிவகுக்கும். உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க இதுவே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்தியாவிலும் மின் வாகன ஊக்குவிப்பு மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிக மானியம், பதிவு கட்டணம் ரத்து போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், மின் வாகன பயன்பாடு பல மடங்கு லாபத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்விக்கியின் இந்த முயற்சி குறித்து நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ அமிதாப் காந்த் கூறுகையில், "சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்கும் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதற்கான முயற்சியில் இந்திய தொழில்துறை தொடர்ந்து ஆதரவை தர வேண்டும். இந்த திசையில் ஸ்விக்கியின் அர்ப்பணிப்பு வரவேற்கத்தக்கது. ஒரு நிலையான எதிர்காலத்திற்காக மற்ற தொழில்துறை வீரர்களும் (நிறுவனங்களும்) தங்கள் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரீஹர்ஷா மஜெட்டி கூறியதாவது, "ஸ்விக்கியின் டெலிவரி பிரிவில் பல மில்லியன் ஆர்டர்கள் ஒவ்வொரு நாளும் கிடைக்கின்றன. ஆகையால், ஒவ்வொரு டெலிவரி பார்ட்னரும் நாள் ஒன்றிற்கு சராசரியாக 80 கிமீ முதல் 100 கிமீ தூரம் வரை பயணிக்கின்றனர். இத்தகைய அதிகபட்ச பயண தூரத்தை மின் வாகனங்களால் இயக்கினால் பெருமளவில் மாசுபாடு குறைக்க முடியும். இத்துடன், கூடுதல் லாபத்தையும் டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்க முடியும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து, "சுற்றுச்சூழல் தாக்கத்தையும் இதன் வாயிலாக குறைக்க முடியும். மேலும், எங்கள் பயணத்தை மேலும் நிலையானதாக மாற்றவும் மின் வாகனங்கள் உதவும். மின் வாகனங்களுக்கு மாறுவது என்பது ஒரு முக்கியமான படியாகும். இது சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என கூடுதலாக தனது கருத்தை அவர் முன் வைத்தார்.

செல்போன் செயலியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்விக்கி நிறுவனம், உணவு பொருட்களை வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் சேவையை செய்து வருகின்றது. இந்த நிறுவனம் சுற்றுச் சூழல் அக்கறையுடன் தனது டெலிவரி சேவையில் மின் வாகனங்களைக் களமிறக்க தயாராகி இருப்பது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக, இந்த செயல் ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து டெலிவரி பார்ட்னர்களாக செயல்பட்டு வருவோர் மத்தியில் இது கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, டெலிவரி பார்ட்னர்கள் பலர் தங்களது பெட்ரோல் இருசக்கர வாகனத்தைக் கொண்டே டெலிவரியை செய்து வருகின்றனர். இவர்கள் மின் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவில் பணம் மிச்சம் செய்யப்படும். அதாவது, பெட்ரோல் விலையுயர்வில் இருந்து மின் வாகன பயன்பாடு தப்பிக்க உதவும். இதுபோன்ற காரணங்களுக்காகவே ஸ்விக்கி மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








