அவ்வளவு பெரிய நிறுவனத்தின் சிஇஓ-னு சொன்னா நம்பவே முடியல! காரை டெலிவிரி எடுத்ததும் முதல்ல வந்தது இங்கே தான்!
அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் மிக பெரும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. நமது சென்னை (Chennai)-இல், எண்ணூர் (Ennore) பகுதியில் கூட அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு தொழிற்சாலை இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இத்தகைய பிரம்மாண்ட நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவாக ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) செயல்பட்டு வருகிறது. அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து அசோக் லேலண்ட் விற்பனை செய்கிறது.
இந்தியாவின் பல நகரங்களில் அரசு பேருந்துகளாக ஸ்விட்ச் மொபிலிட்டியின் எலக்ட்ரிக் பேருந்துகள் (Electric Buses) ஓடுகின்றன. அதுமட்டுமின்றி, சில எடை குறைவான எலக்ட்ரிக் வாகனங்களையும் உற்பத்தி செய்து ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் விற்பனை செய்கிறது. இத்தகைய நிறுவனத்தின் சிஇஓ ஆக இருப்பவர், மகேஷ் பாபு (Mahesh Babu) ஆவார்.

நமது தமிழ்நாட்டை சேர்ந்தவரான மகேஷ் பாபு புதியதாக மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (Mahindra XEV 9e) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கி உள்ளார். குடும்பத்துடன் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் புதிய காருக்கு பூஜை போட சென்ற போது, கோவிலின் வாசலில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகேஷ் பாபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில், "எக்ஸ்யூவி-இல் இருந்து புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9இ வரை. சிறப்பான வசதிகள், தனித்துவமான எலக்ட்ரிக் பயண அனுபவம் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி. இந்தியாவில் சிறந்த எலக்ட்ரிக் வாகனம்" என பதிவிட்டு, மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்கான அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜேஜூரிகரின் எக்ஸ் பக்கத்தை மென்ஷன் செய்து மகேஷ் பாபு நன்றி தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் வாகனங்கள் & விவசாய உபகரணங்களுக்கான நிர்வாக இயக்குனராக ராஜேஷ் ஜேஜூரிகர் உள்ளார். ஸ்விட்ச் மொபிலிட்டியின் சிஇஓ மகேஷ் பாபுவின் இந்த எக்ஸ் பதிவின் மூலம், இதற்கு முன்னர் இவர் பயன்படுத்தி வந்ததும் எலக்ட்ரிக்-அல்லாத மஹிந்திரா எக்ஸ்யூவி (Mahindra XUV) கார் என்பதை அறிய முடிகிறது.
தற்போது புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை மகேஷ் பாபு முற்றிலும் அடர் நீல நிறத்தில் வாங்கியுள்ளார். இதனை 'நெபுலா ப்ளூ' (Nebula Blue) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், டெசர்ட் மிஸ்ட், எவரெஸ்ட் வெள்ளை, டாங்கோ சிவப்பு, டீப் ஃபாரஸ்ட், ரப்பி வெல்வெட் மற்றும் ஸ்டீல்த் பிளாக் கலர் ஆப்ஷன்களிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிஇ 6 எலக்ட்ரிக் காருடன், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்ட நிலையில், டெலிவிரிகள் கடந்த மார்ச் மாதத்தின் மத்தியில் துவங்கப்பட்டன. ஆனால், தற்போதைக்கு இந்த எலக்ட்ரிக் கார்களின் டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதில் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கும், மஹிந்திரா நிறுவனத்திற்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அசோக் லேலண்ட்டை காட்டிலும் இந்த விஷயத்தில் மஹிந்திரா நிறுவனம் ஒருபடி மேலே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை சிறப்பானதாக உருவாக்கியதற்காக மஹிந்திராவை அசோக் லேலண்ட்டின் கீழ் செயல்படும் ஸ்விட்ச் மொபிலிட்டியின் சிஇஓ பாராட்டி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இது மகேஷ் பாபுவின் பெரும் தன்மையையும் காட்டுகிறது. எதிர்காலத்தில் ஸ்விட்ச் நிறுவனத்துக்கு போட்டியாக எலக்ட்ரிக் பேருந்துகளை உருவாக்கும் திட்டத்திலும் மஹிந்திரா உள்ளது.


Click it and Unblock the Notifications









