பாண்டிச்சேரி நம்பர் கொண்ட பாலிவுட் பிரபலத்தின் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மும்பையில் பறிமுதல்!
பாலிவுட் பிரபலம் ஒருவரின் புதுச்சேரி பதிவு எண் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் பிரபலம் ஒருவரின் அதிக விலை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்500 காரை சாலை வரி செலுத்தாத காரணத்தால் மும்பை வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர் பூஷன் குமார், இவர் பாலிவுட்டின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். ‘டி-சீரிஸ்' எனும் பெயரில் உள்ள மியூசிக் நிறுவனத்திற்கும் இவர் அதிபராக உள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் படங்களின் பாடல்களை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் காரை வாங்கிய தயாரிப்பாளர் பூஷன் குமார் அதனை தனது டி-சீரிஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த கார் பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்டதாகும்.

பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷனான ‘PY 05 A 4040' என்ற பதிவெண் கொண்ட பூஷன் குமாரின் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் கார் மகராஷ்டிர மாநிலத்தில் சாலை வரி செலுத்தாமல் ஓட்டியதற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

10 கோடிக்கும் அதிக விலையிலான மெர்சிடிஸ் மேபேக் காரை பறிமுதல் செய்த மும்பை அந்தேரி வட்டார போக்குவரத்து அதிகாரி கோவிந்த் சைந்தேன் கூறுகையில்,"மகராஷ்டிர மாநில போக்குவரத்து சட்டத்தின்படி மாநிலத்தில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கு சாலை வரி கட்ட வேண்டும்" என்றார்.

"விலை உயர்ந்த கார்களுக்கு அதன் மதிப்பில் இருந்து 20% சாலை வரியாக செலுத்த வேண்டும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த மெரிசிடிஸ் பென்ஸ் மேபேக் பல கோடி மதிப்புள்ளது" என்றார்.

மேபேக் காரின் உரிமையாளரான டி-சீரிஸ் நிறுவனத் தலைவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான பூஷன் குமாரிடம் காரின் ரசீது மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க கோரியுள்ளனர்.

ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இந்த காருக்கான சாலை வரி நிர்னயிக்கப்பட்டு உரிய தொகை வசூலிக்கப்படும். மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் காரின் ஆரம்ப விலையே 10.50 கோடியில் இருந்து தான் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் நடித்து வெற்றிபெற்ற அபூர்வ சகோதர்கள் படத்தை கமலுடன் இணைந்து தயாரித்தவர் பூஷன் குமாரின் தந்தையும் டி-சீரிஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவருமான குல்சன் குமார் என்பது கூடுதல் தகவலாகும்.

என்ன தான் விலை உயர்ந்த கார்களை வாங்கினாலும், வாகனங்களை பதிவு செய்ய மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பாண்டிச்சேரியில் குறைவான தொகை என்பதால் பலரும் புதுவையில் தங்கள் வாகனங்களை பதிவு செய்கின்றனர். பாலிவுட் பிரபலங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவிலேயே மகராஷ்டிரா மாநிலத்தில் தான் வாகனப் பதிவிற்கு அதிகளவில் வரிவிதிக்கப்படுகிறது. 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மேபெக் காருக்கு 40 லட்ச ரூபாய் வரி விதிக்கப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








