சென்னை- மும்பை இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரயில்: ரயில்வே துறை தகவல்!
சென்னை- மும்பை வழித்தடம் உள்பட நாட்டின் நான்கு முக்கிய பெரு நகரங்களை இணைக்கும் விதத்தில், அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. தங்க நாற்கர சாலை திட்டம் போன்றே தங்க நாற்கர ரயில் தட திட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, ஸ்பெயின், சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ரயில் நிறுவனங்கள் விரைவில் சோதனை ஓட்டங்களை நடத்த உள்ளன. மிக விரைவாக அதிவேக ரயில்களை இயக்கும் முனைப்புடன் தீவிரம் காட்டப்பட்டு வரும் இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வழித்தடங்கள்
டெல்லி- மும்பை, டெல்லி- கொல்கத்தா, மும்பை- சென்னை ஆகிய வழித்தடங்களில் முதல் கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளன. சோதனை ஓட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், உடனடியாக ரயில்களை இயக்குவதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள்
டெல்லி- மும்பை வழித்தடத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனம் தனது ரயில்களை இயக்கி சோதனை நடத்த உள்ளது. இந்த ரயில்கள் மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும். தற்போதுள்ள சாதாரண தண்டவாளங்களிலேயே டால்கோ ரயில்களை இயக்க முடியும். டெல்லி- கொல்கத்தா இடையிலும் டால்கோ நிறுவனம்தான் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

இதர நிறுவனங்கள்
சென்னை- மும்பை வழித்தடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிஸ்த்ரா நிறுவனம் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான சோதனைகளே மேற்கொள்ளும். டெல்லி- மும்பை வழித்தடத்தில் இனெகோ மட்டுமின்றி, சீன நாட்டை சேர்ந்த தேர்டு ரயில்வே சர்வே அண்ட் டிசைன் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

பயண நேரம்
தற்போது டெல்லி- மும்பை வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 16 மணி நேர பயணத்தில் இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை கடக்கிறது. ஆனால், டால்கோ ரயில் வெறும் 8 மணி நேரத்தில் இந்த தூரத்தை கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் சிக்கனம்
டால்கோ ரயில்கள் அதிவேகமாக செல்வதுடன், தற்போது இயக்கப்படும் ரயில் எஞ்சின்களைவிட 30 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரம். இதனால், பயணக் கட்டணங்களையும் சரியான அளவில் நிர்ணயிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

இலக்கு வேகம்
தங்க நாற்கர ரயில் திட்டத்தின் மூலமாக மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய அதிவேக புல்லட் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக, ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

சென்னை- டெல்லி
தங்க நாற்கர ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ், சென்னை- டெல்லி இடையிலான வழித்தடத்தில் சீனாவை சேர்ந்த தேர்டு ரயில்வே சர்வே அண்ட் டிசைன் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

முக்கிய வழித்தடங்களில்...
டால்கோ ரயில் சோதனை வெற்றிபெற்றால், நாட்டின் அனைத்து முக்கிய ரயில் வழித்தடங்களிலும், அதிவேக ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








