3 மணி நேரத்தில் சென்னை டு பெங்களூர்... டால்கோ ரயிலை சோதனை செய்ய திட்டம்!
அதிவேக ரயில்களை இயக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயில்களை கடந்த இரு மாதங்களாக வட இந்திய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த சோதனை ஓட்டங்கள் திருப்திகரமாக அமைந்திருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக தென்னிந்தியாவின் மிக நகரங்களான சென்னை மற்றும் பெங்களூர் இடையே டால்கோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டிருக்கிறது. இதனால், இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனைகள் வெற்றி
டெல்லியிலிருந்து- மும்பை இடையிலான சோதனை ஓட்டத்தின்போது டால்கோ ரயில் இலக்கு வைக்கப்பட்ட நேரத்தில் பயணத்தை நிறைவு செய்தது. இதனையடுத்து, அடுத்த முயற்சிகளை ரயில்வே துறை மேற்கொண்டிருக்கிறது.

அதிகபட்ச வேகம்
வட மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களின்போது மணிக்கு 130 கிமீ முதல் 180 கிமீ வேகம் வரை டால்கோ ரயில் இயக்கப்பட்டது. டெல்லி- மும்பை இடையிலான 1,384 கிமீ தூரத்திற்கு இயக்கப்பட்ட டால்கோ ரயில் வெறும் 12 மணிநேரத்திற்குள் பயணத்தை நிறைவு செய்து புதிய நம்பிக்கையை கொடுத்தது.

சோதனை ஓட்டம்
தென் இந்தியாவில் முதலாவதாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு டால்கோ ரயிலை இயக்கி சோதனை நடத்தும் முயற்சிகளை தென்னக ரயில்வே மேற்கொண்டிருக்கிறது. இதற்கான முயற்சிகளில் தென்னக ரயில்வே அதிகாரிகள் இறங்கியிருக்கின்றனர்.

வாய்ப்புகள்
2014ம் ஆண்டில் சென்னை - கூடூர் மற்றும் சென்னை- அரக்கோணம் வழித்தடங்களில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த தகவல்களை ரயில்வே துறை வெளியிடவில்லை. இருப்பினும், இந்த சோதனை ஓட்டத்தின் மூலமாக இந்த வழித்தடங்களில் தண்டவாளங்கள் போதிய வலுவாக இருப்பதால், டால்கோ ரயிலை இயக்குவது சாத்தியம் என்று தென்னக ரயில்வே கருதுகிறது.

அதிகாரிகள் முயற்சி
டால்கோ ரயிலை சோதனை நடத்துவதில் தென்னக ரயில்வே அதிகாரிகள் முழு ஆர்வம் காட்டுவதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. அதாவது, டால்கோ ரயிலின் பெட்டிகள் ஒற்றை ஆக்சில் அமைப்புடையது. இதன்மூலமாக, வளைவுகளில் வேகத்தை குறைக்காமலேயே ரயிலை சீரான வேகத்தில் இயக்க முடியும்.

சரிதான்...
இதனால், அதிக வளைவுகள் கொண்ட சென்னை - பெங்களூர் வழித்தடத்தில் டால்கோ ரயில் மிகச் சிறப்பானதாக இருக்கும். இதன்மூலமாக, ரயிலின் சராசரி வேகம் வெகுவாக அதிகரிக்கும் என்பதன் காரணமாக, இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும்.

எஞ்சின் திறன்
தற்போது பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகளை விட டால்கோ ரயில் பெட்டிகள் எடை குறைவானது. இதனால், தற்போது பயன்படுத்தப்படும் மின்சார எஞ்சின்களை வைத்து டால்கோ ரயிலை இயக்கும்போது எஞ்சினின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும். மின்சார சிக்கனமும் கிடைக்கும்.

பயண நேரம்
டால்கோ ரயில் சோதனை ஓட்டம் குறித்து தென்னக ரயில்வே வட்டாரம் கூறும் தகவல்களின்படி, தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சதாப்தி ரயில் 4 மணி 40 நிமிடங்களில் இந்த நகரங்களை இணைக்கிறது. ஆனால், டால்கோ ரயில் வெறும் 3 மணிநேரத்தில் இரு நகரங்களையும் இணைக்கும் என்கின்றனர்.

பயன்
சென்னை- பெங்களூர் இடையில் டால்கோ ரயில் இயக்கப்படும்பட்சத்தில், அதன் கட்டணம் சதாப்தியை விட அதிகம் இருக்கும். எனவே, சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் பணிபுரியும் ஐடி ஊழியர்கள் வார கடைசியில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இந்த ரயில் மிகுந்த பயனளிக்கும். மேலும், சாதாரண ரயில்களில் தற்போது இருக்கும் கூட்ட நெரிசல் ஓரளவு குறையும்.

தடைகள்
டால்கோ ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டாலும்கூட, அந்த ரயிலை பயணிகள் சேவைக்கு இயக்குவதற்கு இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்திய நடைமேடைகளுக்கு தகுந்தவாறும் டால்கோ ரயிலில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications








