இந்திய ரயில் போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் டால்கோ ரயில்!
அதிவேக ரயில்களை இயக்குவதில் ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்டி வருவது அறிந்ததே. புல்லட் ரயில் எனும் கனவு நீண்ட கால திட்டமாக இருப்பதால், உடனடி தீர்வாக ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், டால்கோ ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தவும் மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு இருக்கிறது. இது இந்திய ரயில் போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இருதரப்புக்கும் பயன்
டால்கோ ரயில் பெட்டிகள் மூலமாக சொகுசான, அதிவிரைவான பயணத்தை பயணிகல் பெற முடியும். அதேபோன்று, ரயில்வே துறை என இருதரப்புக்கும் அதிக பயன்தருவதாக இருக்கும். இதுகுறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி கூறும் கருத்துக்களை தொடர்ந்து காணலாம்.

ராஜ்தானிக்கு புதிய பெட்டிகள்
தற்போது ராஜ்தானி, சதாப்தி போன்ற அதிவேக ரயில்களில் LHB என்ற நவீன வகை ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதற்கு மாற்றாக டால்கோ ரயில் பெட்டிகளை ராஜ்தானி மறறும் சதாப்தி ரயில்களில் பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு இருக்கிறது.

பாதி விலை
ராஜ்தானி ரயில்களில் பயன்படுத்தப்படும் LHB ரயில் பெட்டி ஒன்றின் விலை ரூ.2.7 கோடி ஆகிறது. ஆனால், டால்கோ ரயில் பெட்டி ஒன்றின் விலை ரூ.1 கோடி மட்டுமே. இதனால், ரயில்வே துறையின் முதலீடு பாதியாக குறையும்.

மின் சிக்கனம்
ராஜ்தானி, சதாப்தி ரயில்களைவிட இந்த டால்கோ ரயில் பெட்டிகள் இலகு எடையும், சிறப்பான ஏரோடைனமிக்ஸும் கொண்டவை. இதனால், 30 சதவீதம் வரை மின்சார செலவை குறைக்கும்.

அதிகபட்ச வேகம்
டால்கோ ரயில் பெட்டிகள் மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும். ஆனால், சோதனை ஓட்டத்தின்போது வேகத்தை படிப்படியாக உயர்த்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சராசரி வேகம்
தற்போது ராஜ்தானி ரயில்கள் சராசரியாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், டால்கோ ரயில் பெட்டிகள் சராசரியாக மணிக்கு 125 கிமீ வேகம் வரை செல்லும்.

பயண நேரம்
டெல்லி- மும்பை இடையிலான தூரத்தை ராஜ்தானி ரயில்கள் 17 மணி நேரத்தில் கடக்கின்றன. அதே தூரத்தை டால்கோ ரயில்கள் 12 மணிநேரத்தில் கடந்துவிடும்.

பெரும் பயன்
மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில்களை இயக்குவதற்காக ஏற்கனவே உள்ள ரயில் தண்டவாளங்களில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டியிருக்காது.

பெட்டிகள் இறக்குமதி
சோதனை ஓட்டங்களுக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து 9 டால்கோ ரயில் பெட்டிகள் மும்பை துறைமுகத்திற்கு வந்து இறங்கியிருக்கின்றன. விரைவில் இந்த பெட்டிகளை கோர்த்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

சோதனை ஓட்டத் தடங்கள்
பெய்ரேலி- மொராதாபாத் இடையே மணிக்கு 115 கிமீ வேகத்தில் இயக்கி டால்கோ ரயில் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரா- பல்வால் இடையே மணிக்கு 180 கிமீ வேகத்திலும் மற்றும் டெல்லி- மும்பை வழித்தடத்தில் மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

இலவசம்
சோதனை ஓட்டம் நடத்துவதற்காக ரயில் பெட்டிகளை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனம் இலவசமாக வழங்கியிருக்கிறது.

அதிக டால்கோ ரயில்கள்
சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் அதிக அளவில் டால்கோ ரயில்களை இறக்குமதி செய்யவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதாவது, ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் டால்கோ ரயில் பெட்டிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

டென்டர்
சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற பின், சர்வதேச டெண்டர் மூலமாக டால்கோ ரயில்களை பெறுவதற்கு ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக, ஒரு டால்கோ ரயில் பெட்டியின் விலை ரூ.1 கோடி என்பது இன்னும் குறையவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சென்னை- டெல்லி
சென்னை- டெல்லி இடையிலும் டால்கோ ரயில் விடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன்மூலமாக, டெல்லி- சென்னை இடையிலான தூரத்தை 27 மணி நேரத்தில் துரந்தோ ரயில் கடக்கிறது. இதுவே டால்கோ ரயில் மூலமாக இந்த பயண தூரத்தை 20 மணிநேரத்திற்குள் டால்கோ ரயில் கடந்து விடும் வாய்ப்பு ஏற்படும்.


Click it and Unblock the Notifications








