12 மணிநேர சோதனையில் சாதனை... பயன்பாட்டுக்கு வர ஓர் ஆண்டு பிடிக்கும் என தகவல்!
12 மணிநேரத்தில் டெல்லியிலிருந்து மும்பையை தொட்டு சாதனை படைத்துள்ளது டால்கோ ரயில். இதையடுத்து, பயணிகள் சேவையில் டால்கோ ரயிலை களமிறக்குவதற்கான முயற்சிகளை ரயில்வே துறை இறங்க இருக்கிறது.
நேற்றுமுன்தினம் நடந்த இறுதிக்கட்ட சோதனையின்போது டெல்லியிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்ட டால்கோ ரயில் நள்ளிரவு 2.33 மணிக்கு மும்பையை அடைந்தது. அதாவது, இலக்கு வைக்கப்பட்ட 12 நேரத்திற்கு 18 நிமிடங்கள் முன்பாகவே மும்பையை அடைந்தது.

இந்த இறுதி சோதனை ஓட்டத்தினபோது டால்கோ ரயில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. சோதனை திருப்திகரமாக அமைந்ததை ரயில்வே துறை டிவிட்டர் மூலமாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், டால்கோ ரயிலை வணிக பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்வதற்கு ஓர் ஆண்டு பிடிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அதிவேக சோதனை திருப்திகரமாக அமைந்தாலும், இதுவரை நடத்தப்பட்டிருக்கும் சோதனை ஓட்டங்களில் கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

சோதனை ஓட்டத்தின்போது திரட்டப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுத் தகவல்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதனை அந்த ஆணையத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து, டால்கோ ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தண்டவாளங்கள், சிக்னல்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு எடுக்க உள்ளனர்.

அந்த பணிகள் முடிந்த பின்னர், டால்கோ ரயில்களை வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். இதற்கு குறைந்தது ஓர் ஆண்டு காலம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், டால்கோ ரயில்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டுவதற்கும், தனியார் நிறுவனங்கள் டால்கோ ரயில்களை இயக்குவதற்கு அனுமதிப்பதற்குமான இரண்டு திட்டங்களும் ரயில்வே வசம் உள்ளது. இதில், எது சிறந்தது என்பதையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

இதுதவிர, டால்கோ ரயில்களின் படிக்கட்டுகள் இந்திய ரயில் நிலையங்களின் நடைமேடைகளின் உயரத்திற்கு ஏற்ப மாற்றங்களை செய்வதும் அவசியமாகிறது. இந்த விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் டால்கோ ரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் டால்கோ ரயிலையும் இயக்குவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டிருக்கிறது. இதனிடையே, டால்கோ ரயிலை சென்னை- பெங்களூர் இடையே இயக்கிப் பார்ப்பதற்கு தென்னக ரயில்வே முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இந்தநிலையில், திட்டமிடப்பட்ட வட இந்திய வழித்தடங்களில் டால்கோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றிருப்பதால், இறக்குமதி செய்யப்பட்ட 9 டால்கோ ரயில் பெட்டிகளும் தற்போது சென்னை- பெங்களூர் இடையே இயக்கி பார்க்க அனுமதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மேலும், சென்னை - பெங்களூர் நகரங்களை டால்கோ ரயில் வெறும் 3 மணிநேரத்தில் கடந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிப்பதால், பயணிகள் மத்தியிலும் ஆவல் எழுந்துள்ளது. டால்கோ ரயிலின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்போனால், வளைவுகளில் வேகத்தை குறைக்காமல் செல்வதற்கேற்ற ஒற்றை ஆக்சில் அமைப்பு கொண்ட இலகு எடை பெட்டிகள் உள்ளன.

இதனால், மின்சார ரயில் எஞ்சின்களின் இழுவை சுமை வெகுவாக குறையும் என்பதால், 30 சதவீதம் வரை மின்சார சிக்கனத்தை தரும்.
ஆன்லைனிலேயே கார் இன்ஸ்யூரன்ஸ்!


Click it and Unblock the Notifications








