மணிக்கு 200 கிமீ வேகம் செல்லும் டால்கோ ரயில்: ஜூனில் சோதனை ஓட்டம்!
டெல்லி- ஆக்ரா இடையே மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சமீபத்தில் துவங்கப்பட்ட நிலையில், அதைவிட வேகமான ரயிலை இயக்குவதற்கு ரயில்வே துறை மும்முரமாக களமிறங்கியிருக்கிறது.
ஆம், வரும் ஜூன் மாதம் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயில் சோதனை ஓட்டத்தை துவங்க இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த சிறப்புத் தகவல்களை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

பெட்டிகள் இறக்குமதி
கடந்த மாதம் 27ந் தேதி ஸ்பெயின் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட 9 டால்கோ ரயில் பெட்டிகள் தற்போது கப்பலில் வந்து கொண்டிருக்கிறது. வரும் 21ந் தேதி இந்த ரயில் பெட்டிகள் மும்பை துறைமுகத்திற்கு வந்தடையும்.

ஆய்வுப் பணிகள்
மும்பை துறைமுகத்தில் சுங்கத் துறை ஆய்வுகள் முடிந்த கையோடு, இஸாத்நகர் ரயில் டெப்போவிற்கு இந்த 9 டால்கோ ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்படும். அங்கு ரயில் பெட்டிகளில் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.

சோதனை ஓட்டம்
வரும் ஜூன் மாதம் டால்கோ ரயில் பெட்டிகள் கோர்க்கப்பட்டு, பெய்ரேலி- மொராதாபாத் நகரங்களுக்கு இடையில் முதல் டால்கோ ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 115 கிமீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

200 கிமீ வேகம்
இதைத்தொடர்ந்து, டெல்லி- ஆக்ரா இடையிலான வழித்தடத்தில் உள்ள பல்வால்- மதுரா இடையில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கி இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக டெல்லி- மும்பை இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இலகு எடை
டால்கோ ரயில்கள் இலகு எடையும், அதிக வேகத்தில் செல்லும் திறனும் கொண்டவை. தற்போது உள்ள வழித்தடத்திலேயே அதிக மாற்றங்களை செய்யாமல், இந்த ரயில்களை மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயக்க முடியும்.

டால்கோ ஆர்வம்
ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வது, சோதனை ஓட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவற்றிற்கான செலவீனங்களை டால்கோ நிறுவனமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

மின்சார சிக்கனம்
தற்போது இயக்கப்படும் ரயில்களை விட டால்கோ ரயிலுக்கான மின்சார செலவீனம் 30 சதவீதம் வரை குறைவாக இருக்குமாம். இதனால், ரயில்வேறு துறைக்கு மின்சார செலவில் அதிக அளவில் சேமிக்கும் வாய்ப்பும் ஏற்படும்.

கட்டணம்
புல்லட் ரயில் கட்டணம் போல அல்லாமல், தற்போதுள்ள ரயில் கட்டணத்தைவிட சற்றே கூடுதலான கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, டால்கோ ரயில்கள் இந்தியாவிற்கு மிக பொருத்தமான போக்குவரத்து சாதனமாக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதர வழித்தடங்கள்
சென்னை- டெல்லி, சென்னை- மும்பை, டெல்லி- கொல்கத்தா, மும்பை- ஆமதாபாத் உள்ளிட்ட வழித்தடங்களிலும் இந்த ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எனவே, இந்த நீண்ட தூர ரயில் பயணங்கள் விரைவில் சுருங்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

தமிழகத்தின் கனவு
வட இந்தியாவில் டால்கோ ரயில் சேவை வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வட இந்திய நகரங்களுடன் சென்னையை இணைப்பதற்கு மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயில் சேவை துவங்கப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்!


Click it and Unblock the Notifications








