நம்ம ஆளுங்க வேற லெவல்... சென்னையை கலக்கும் கொரோனா ஆட்டோ... இதன் ஸ்பெஷல் என்னனு தெரியுமா?
தமிழக தலைநகர் சென்னையை கொரோனா ஆட்டோ கலக்கி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் (கோவிட்-19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கொரோனா வைரசுக்கு தற்போது வரை அதிகாரப்பூர்வ மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

எனவே வரும் முன் காத்து கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாததாலும், அலட்சியம் காரணமாகவும், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிலைகுலைந்து போயுள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவில் பாதிப்புகள் மிக அதிகமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின்பும் கொரோனா கட்டுக்குள் வராததால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல் துறை எச்சரிக்கை செய்துள்ளது. பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதுதான் நமக்கு தற்போது இருக்கும் ஒரே வழியும் கூட. ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஒரு சிலர் தேவையே இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு இல்லாததே இதற்கு காரணம். கொரோனாவின் தீவிரத்தை அவர்கள் உணரவில்லை. எனவே அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் காவல் துறை அதிகாரி ஒருவர் கொரோனா ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த ஹெல்மெட் கோவிட்-19 வைரஸின் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் காவல் துறையினர், கொரோனா வைரஸின் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனா ஹெல்மெட் தவிர, கொரோனா கார் வடிவமைக்கப்பட்ட சம்பவமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தெலங்கானா நகரில் இந்த வித்தியாசமான கார் வடிவமைக்கப்பட்டது. கொரோனா கார் வரிசையில், தற்போது கொரோனா ஆட்டோரிக்ஸாவும் இணைந்துள்ளது.

தமிழக தலைநகர் சென்னையில்தான் இந்த கொரோனா ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் கோவிட்-19 வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழக அளவில் பார்த்தால், சென்னைதான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சென்னையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸை கருப்பொருளாக கொண்டு, கலைஞர் ஒருவர் ஆட்டோரிக்ஸா ஒன்றை மாடிபிகேஷன் செய்துள்ளார். கோவிட்-19 வைரஸின் உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஆட்டோரிக்ஸா மூலம் சென்னை வீதிகளில், கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அந்த ஆட்டோவில் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த ஆட்டோ மூலம் மக்களுக்கு முக கவசங்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்த ஆட்டோவின் சிறப்பம்சங்களில் ஒன்று.


Click it and Unblock the Notifications








