நம்பர் 1 இடத்தில் உத்திர பிரதேசம், 3வது இடத்தில் நம் தமிழ்நாடு! இந்த விஷயத்தில் உ.பி காரர்களை முந்துவது கஷ்டம்
உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தையாக நம் இந்தியா மாறி வருகிறது. இப்படிப்பட்ட தற்போதைய சூழலில், நம் நாட்டில் வாகனங்கள் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் முதல் 10 மாநிலங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது? நம் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது? என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உலகின் 3வது மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்குகிறது. தொலைத்தூரத்திற்கு சாலை கட்டமைப்பை கொண்ட நாடுகள் வரிசையிலும், அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. மக்கள் தொகையை அதிகம் கொண்ட நாடாக நம் இந்தியா சமீபத்தில் முதலிடத்தை பிடித்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இவ்வாறு, ஓர் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்க, அத்தனை அம்சங்களும் நம் நாட்டில் ஒன்றிப் போய் உள்ளன. இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளில் நம் நாட்டில் கால் பதித்த வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல. அதேபோல், உள்நாட்டிலும் பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முளைத்துள்ளன. குறிப்பாக, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் பல்வேறு புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
இப்படிப்பட்ட தற்போதைய சூழலில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்கிய 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) அதிக எண்ணிக்கையில் ஆட்டோமொபைல் வாகனங்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை பிடித்து உத்திர பிரதேச மாநிலம் அசத்தியுள்ளது.

இதில், பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், கமர்ஷியல் வாகனங்கள் உள்பட 3-சக்கர வாகனங்களும் அடங்குகின்றன. 2023 ஏப்ரல் -ஜூன், இந்த 3 மாதங்களில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்கப்பட்ட மாநிலமாக உத்திர பிரதேசம் முதலிடத்தை பிடித்து இருக்க, 2வது மற்றும் 3வது இடங்களில் முறையே மஹாராஷ்டிரா மற்றும் நமது தமிழ்நாடு உள்ளது.
பயணிகள் வாகனங்களை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், அதாவது கார்கள் மற்றும் பயணிகளை அழைத்துச் செல்லும் சிறிய ரக வேன்களை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், மற்ற எல்லா மாநிலங்களையும் முந்திக் கொண்டு மஹாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் முதல் 3 இடங்களில் நமது தமிழ்நாட்டிற்கு இடமில்லை. மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் உத்திர பிரதேசமும், 3வது இடத்தில் நமது அண்டை மாநிலமான கர்நாடாகவும் உள்ளன.
இந்தியாவில் ஏப்ரல் -ஜூனில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் கிட்டத்தட்ட 12% மஹாராஷ்டிரா மாநிலத்தில் விற்கப்பட்டுள்ளன. உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடாகாவின் பங்கு முறையே 10% மற்றும் 8% ஆக பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனங்களை பொறுத்தவரையில், உத்திர பிரதேசம் சுமார் 17 சதவீத 2-வீலர்கள் விற்பனை பங்கு உடன் முதலிடத்தில் கம்பீரமாக உள்ளது. ஏனெனில் 2வது இடத்தில் உள்ள மஹாராஷ்டிராவின் பங்கு வெறும் 9% மட்டுமே ஆகும்.

மொத்த 2-வீலர் விற்பனையில், தமிழ்நாட்டில் 8%-மும், தெலுங்கானாவில் 4%-மும் பதிவாகியுள்ளன. பயணிகள் வாகனங்களை போன்று, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் மஹாராஷ்டிரா முதலிடத்தை வகித்துள்ளது. கடந்த ஏப்ரல் -ஜூன் மாதங்களில் இந்தியாவில் பதிவான மொத்த கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் கிட்டத்தட்ட 12% மஹாராஷ்டிராவில் பதிவானவை ஆகும். இதற்கடுத்து உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் 10% மற்றும் 9% பங்கு உடன் 2வது & 3வது இடத்தை தனதாக்கியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வாகனங்களை வாங்குவதற்காக மக்கள் செலவிட்ட தொகையை எடுத்து பார்த்தால் மஹாராஷ்டிரா மொத்த அளவில் முதலிடத்திற்கு வரலாம். ஆனால், 2-வீலர் என்ற ஒரு பிரிவை மொத்தமாக உத்திர பிரதேசம் தனதாக்கியுள்ளதால், மொத்த வாகனங்கள் விற்பனையில் உத்திர பிரதேசம் முதலிடமும், மஹாராஷ்டிரா 2வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த வரிசையில் நம் தமிழ்நாட்டை 3வது இடத்தில் பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









