சம்பவம் செய்த பி.டி.ஆர்... விடியல் தந்தது முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அரசு... வாயடைத்து போன எதிர்கட்சிகள்!
தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கவனத்தை இந்த அறிவிப்புகள் பெரிதும் ஈர்த்தன. இதன்பின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.

திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றினார். இதன்படி ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்பட்டது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதை எதிர்கட்சிகள் கையில் எடுத்து கொண்டன. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், விலை குறைக்கப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது.

தமிழ்நாட்டு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும் இந்த சந்தேகத்தை உறுதிபடுத்துவது போல்தான் இருந்தது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பாக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாட்டு அரசின் கடன் சுமை பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த சூழலில் தமிழ்நாட்டு அரசின் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியில் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் வலியை புரிந்து கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கு இணங்க பெட்ரோல் மீதான வரியை குறைத்துள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் 5 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்திருந்தாலும், தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு 3 ரூபாயை குறைப்பதால், 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமையை சீராக்குவதற்கான பணிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

நிதி நிலைமை சீரடைந்த பிறகு, பெட்ரோல் விலை மேலும் குறைக்கப்படும் என நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம். அதே சமயம் டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு பின்னாலும் நாம் ஒரு காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் 2.63 கோடி இரு சக்கர வாகனங்கள் இருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களில் பெட்ரோல்தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் பெட்ரோல் மீதான வரி குறைப்பால் பயன் அடைவார்கள். எழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பலரின் வீடுகளில் டூவீலர்களே பிரதான வாகனமாக உள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதே சமயம் டீசல் வாகனங்கள் அதிகமாக இருப்பதையும், சரக்கு வாகனங்களில் டீசல்தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் மறுத்து விட முடியாது. எனினும் வரும் காலங்களில் டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சிகளையும் தமிழ்நாட்டு அரசு மேற்கொள்ளும் என நாம் நம்பலாம். தற்போது பெட்ரோல் விலையை குறைத்திருப்பதற்காக தமிழ்நாட்டு அரசுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.51 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தற்போது மூன்று இலக்கத்தில் உள்ள பெட்ரோல் விலை, தமிழ்நாட்டு அரசின் வரி குறைப்பு நடவடிக்கையால் மீண்டும் இரட்டை இலக்கத்திற்கு வரவுள்ளது. இன்று நள்ளிரவு முதலே விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனையும் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








