இது சூப்பரா இருக்கே... மதுரை மீன் கடையில் அதிரடி சலுகை... போட்டி போட்டு கொண்டு குவிந்த வாடிக்கையாளர்கள்!
மதுரை மீன் கடையில் வழங்கப்பட்ட ஒரு சலுகையால், அங்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல் மட்டுமல்லாது, டீசல் விலையும் இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், மதுரை பீ.பீ.குளம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் கடையில் நேற்று (ஆகஸ்ட் 1) அதிரடியான சலுகை ஒன்று வழங்கப்பட்டது. இதன்படி 500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் அந்த மீன் கடையில் போட்டி போட்டு கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.

இது தொடர்பான அறிவிப்பு பலகை கடை முன்பு வைக்கப்பட்டிருந்தது. இதில், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், 500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் இந்த சலுகை ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் அறிந்ததும் பலர் அந்த மீன் கடையில் குவிந்தனர். அத்துடன் தங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் இதுகுறித்து தகவல் கொடுத்தனர். ஏதேனும் ஒரு கடையில் மீன் வாங்கலாம் என முடிவு செய்திருந்த பலரும், இந்த தகவல் அறிந்ததும் அந்த கடையில் குவிந்தனர். வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் கடையின் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அறிவிக்கப்பட்டதை போன்றே, 500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இந்த டோக்கனை வைத்து வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க்கில் ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று கொண்டனர். இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு சிலர் நிறைய கூப்பன் பெறுவதற்காக நிறைய தொகைக்கு மீன்களை வாங்கினர். இதுகுறித்து மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களிலும் நிறைய பேர் இதுபோன்ற சலுகைகளை வழங்கியுள்ளனர். இதன்படி கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரியாணி வாங்கினாலும் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்? இதே மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை இறைச்சி கடை ஒன்று சமீபத்தில் அறிவித்தது. ஆடி மாதம் முழுவதும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அந்த இறைச்சி கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட கடைகளில் விற்பனையும் உயர்ந்து வருகிறது. ஆனால் இந்த சலுகைகளில் பெட்ரோலை இலவசமாக பெறும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து பலரும் சிந்தித்து வருகின்றனர். எனவே வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயரலாம்.


Click it and Unblock the Notifications








