சிங்க முகத்தை காட்ட ஆரம்பிச்சுட்டாரு... டிஜிபி சைலேந்திர பாபு திடீர் அதிரடி... இனி யாரும் தப்பிக்க முடியாது!
இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே தமிழக காவல் துறையினர் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. முன்பெல்லாம் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த அபராத தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாகவும் காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தின் மிகவும் முக்கியமான நகரங்களில், சுமார் 90 பேர் ஹெல்மெட் அணிய தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கே வினோதம் என்னவென்றால், ஹெல்மெட் விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டிய காவல் துறையை சேர்ந்த ஒரு சில அதிகாரிகளே, முறையாக ஹெல்மெட் அணிவதில்லை. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் காவல் துறை அதிகாரிகளை சாலையில் அதிகமாக காண முடிகிறது.
இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து, தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தற்போது அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன்படி வாகன ஓட்டிகள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய, காவல் துறையை சேர்ந்த அனைவரும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது துறை ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் ஹெல்மெட் அணியாமல் வேலைக்கு வரும் காவல் துறை அதிகாரிகளின் இரு சக்கர வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே காவல் துறையை சேர்ந்தவர்கள் என்பதை காரணமாக தெரிவித்து, ஒரு சிலர் வாக்குவாதங்களில் ஈடுபடுதையும் நம்மால் அவ்வப்போது காண முடிகிறது. இப்படி நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
மேலும் வாகன சோதனையில் ஈடுபடும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முழுமையான அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார். டிஜிபி சைலேந்திர பாபுவின் எச்சரிக்கையை அடுத்து, காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் இனி இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது முறையாக ஹெல்மெட் அணிவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோருக்கு ஹெல்மெட்கள்தான் முக்கியமான பாதுகாப்பு அரணாக உள்ளன.
எனவே எக்காரணத்தை கொண்டும், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. சிறிய தவறு கூட பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை மனதில் கொண்டு, ஹெல்மெட் அணியும் பழக்கத்தை அனைவரும் பின்பற்ற தொடங்குவது நல்லது. பயணம் சிறியது, பெரியது என்பதை பொருட்படுத்தாமல், இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து விட்டால், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உறுதி மொழியை அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும்.
அதேபோல் கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட்களை அணிவதன் மூலமும், குடி போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதன் மூலமும், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். இதுபோன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்கள்தான் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதிவேகத்தில் பயணம் செய்வதை வாகன ஓட்டிகள் கைவிடுவதும் நல்லது. விதிமுறைகளுக்கு உட்பட்ட வேகமே நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








